கேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம்
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம், தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை கைப்பற்றியது.
3 முறை சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பாஜக 109 தொகுதிகளை வென்றது. மெஜாரிட்டிக்கு தேவை 116 எம்எல்ஏக்கள் என்ற நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும், சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
ஆ.. கட்காரிதான் அடுத்த பிரதமரா... மாநில கட்சிகளை வளைக்க பாஜக பக்கா வியூகம்?
எக்ஸிட் போல்
கமல்நாத் மத்திய பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் மெஜாரிட்டியை கஷ்டப்பட்டுதான் தக்க வைத்துள்ளதால் காங். அரசு தலைமீது கத்தி ஆடிக்கொண்டுள்ளது. இந்த நிலையில்தான், லோக்சபா தேர்தலையடுத்து நேற்று வெளியான எக்ஸிட் போல், காங். அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரசில் மோதல்
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் சுமார் 24 தொகுதிகளையாவது பாஜக வெல்லும் என்றுதான் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சொல்லியுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அதிரடியாக ஆளுநருக்கு, பாஜகவை சேர்ந்த, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
பெரும்பான்மை பலம்
அதில், அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட விஷயங்களை பேச வேண்டும், ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்குள் பூசல்கள் எழுந்துள்ளன. அவர்கள் ஏற்கனவே மைனாரிட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இப்போது அதற்குள்ளும் மோதல் எழுந்துவிட்டது.
இரு கோஷ்டி
காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி இருப்பதால்தான் லோக்சபா தேர்தல் இறுதி கட்டம் எட்டும் முன்பே ஜோதிர் ஆதித்ய சிந்தியா வெளிநாடு போய்விட்டார். எனவே, ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும் என்று கோபால் பார்கவா தெரிவித்தார். ம.பி. முதல்வருக்கான போட்டியில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும், கமல்நாத் ஆகியோர் இருந்தனர். கமல்நாத்துக்கு பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. எனவே அங்கு காங்கிரஸ் இரு கோஷ்டிகளாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.