"மதராசாக்களே இருக்கக் கூடாது.. முஸ்லிம்கள் அனைவருமே முதலில் இந்துக்கள் தான்!" அசாம் முதல்வர் பரபர
டெல்லி: ஆஎஸ்எஸ் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஆஎஸ்எஸ் சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மதராசா குறித்துத் தெரிவித்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாம், பீகாரில் வெள்ளம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கேரளாவிற்கு மஞ்சள் அலார்ட்.. வானிலை அப்டேட்
மதராசா
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "மதராசா இருக்கக் கூடாது. மதராசா என்ற சொல்லே இருக்கக் கூடாது. குர்ஆனை வீட்டில் கற்றுக் கொடுங்கள். அதை யாரும் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிவியலும் கணிதமும் கற்பிக்கப்பட வேண்டும். நாங்கள் (பாஜக) ஆட்சிக்கு வந்ததும், அரசு பணத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தின் மதக் கல்விக்குச் செலவிடக்கூடாது என்பதை உணர்ந்தோம்" என்றார்.
ராகுல் காந்தி
அசாமில் மதராசாக்கள் அரசு நிதியுதவி பெறுவதை நிறுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரிட்டன் நாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, இந்தியா முழுவதும் பாஜக வெறுப்பு வாதம் என்ற மண்ணெண்ணை தெளித்துள்ளதாகவும் இப்போது ஒரு சின்ன தீப்பொறி போதும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
கலாசாரம்
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்துப் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, "அப்படியென்றால் 5,000 ஆண்டுகள் பழமையான கலாசாரம் என்னவாகும்? ராமாயணம், மகாபாரதம், ராமர், கிருஷ்ணர், சாணக்கியர், சிவாஜி எல்லாம் யார்? நான் அவரைக் குறை கூறவில்லை. இந்த விஷயங்களை அவருக்குக் கற்பித்த சில ஜேஎன்யு மாணவர்களிடம் இந்த கேள்விகளையும் அவர் கேட்டிருக்க வேண்டும்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் கொள்கை என்றெல்லாம் எதுவும் இல்லை. அங்கு நேரு குடும்பத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். அங்கு நேரு குடும்பம் தான் எல்லாம், அவர்களைத் தாண்டி கட்சி எதுவும் இல்லை. ஆனால், எதோ ஒரு நபர் அல்லது குடும்பத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், நீங்கள் தேசத்திற்குக் கீழ்ப்படியவில்லை என்று அர்த்தமல்ல" என்றார்.
அசாம் முஸ்லீம்கள்
அசாமில் உள்ள முஸ்லீம்கள் குறித்துப் பேசிய அவர், "மாநிலத்தின் 36 சதவீத முஸ்லீம் மக்கள்தொகையை 3 வகைகளாகப் பிரிக்கலாம். உள்ளூர் முஸ்லிம்கள் - அவர்கள் ஒரே கலாசாரம் மற்றும் மொழியைக் கொண்டிருப்பவர்கள். மதம் மாறிய முஸ்லிம்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் வேறு கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். அவர்கள் சில சமயங்களில் தங்கள் மொழியை மியான் என்றும் கூட கூறுகிறார்கள்.
மியான் முஸ்லீம்கள்
மியான் முஸ்லீம்கள் மிகவும் வகுப்புவாதிகள். அசாமின் கலாச்சாரத்தைச் சிதைப்பதற்கு அவர்கள் தான் முக்கிய காரணம். மியான்கள் என்று அவர்களே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, அவர்களை ஏன் அந்த பெயரில் குறிப்பிடக்கூடாது என்ற கேள்வியும் இப்போது மாநிலத்தில் எழுந்துள்ளது.
ஒரே வழி
என்னைப் பொறுத்தவரை, இங்குள்ள அனைத்து முஸ்லீம் மக்களும் உண்மையில் ஒரு இந்து தான். மாதம் மாறி சென்றவர்களை மீண்டும் மறு மதமாற்றம் செய்வது என்பதற்கு ஒரே ஒரு வழி தான் சாத்தியம். அது தான் சரியான கல்வி. ஆனால் அதேநேரம் இதற்காக அனைவரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் அல்லது தெய்வத்தை வணங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இங்குள்ள அனைவரும் இந்தியாவுக்கு முதலிடம் கொடுத்து, இந்தியாவின் நலன்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அசாம் வீரர்கள்
அசாமில் அமைந்துள்ள பழைய அஹோம் ராஜியத்தின் தளபதியான லச்சித் போர்புகோன் போன்ற வரலாற்று அசாமிய நாயகர்களை நாம் பாராட்ட வேண்டும். லச்சித் போர்புகோன் போன்ற மாவீரர்களின் துணிச்சலின் காரணமாகவே அசாம் இஸ்லாமிய படையெடுப்புகள் நடைபெறவில்லை. தென்கிழக்கு ஆசியப் பகுதி இஸ்லாமிய நாகரிகங்களால் தீண்டப்படாமல் இருக்க அசாம் தான் முக்கிய காரணம்" என்றார்.