'கிணற்றுதவளை'.. புரியாமைதான் பிரச்சனை.. ட்விட்டரில் மத்திய அமைச்சர், மதுரை எம்பி காரசார மோதல்
டெல்லி :இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வு துறையில் காலியிட விவகாரத்தில் மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசன், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் இடையே காரசார விவாதம் நடந்தது.
இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வுக்கென்று குறைந்தது 40 தொழில்நுட்ப பதவிகளை உருவாக்க கோரி மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசன், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
அந்த கடிதத்தில், "இந்திய வரலாறு 98 சதவிகிதம் கல்வெட்டுகள் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. மௌரியர்கள், சத்வகனர்கள், சுங்கர்கள், குஷனர்கள், குப்தர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட வம்சாவழிகள் கல்வெட்டுகள் மூலமாகவே சமகால வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதுவரை, இந்தியா முழுவதிலும் 80,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. 80,000 கல்வெட்டுகளில் சுமார் 70 சதவிகிதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளில் இருக்கின்றன. மீதி 30 சதவிகிதம் பிற மொழிகள்.
பணியாளர்கள் இல்லை
135 வருட பாரம்பரியம் கல்வெட்டு ஆய்வுத் துறைக்கு இருந்தாலும் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 50 சதவிகிதமான கல்வெட்டுகள் மட்டுமே துறை அறிக்கைகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 50 சதவிகிதம் கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. செய்வதற்கு பல வேலைகள் இருந்த போதும் கல்வெட்டு ஆய்வுத் துறை மிக சொற்ப அளவிலான பணியாளர்களுடனேயே இயங்குகிறது. போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தேங்கியிருக்கும் சில முக்கியமான பணிகளை உங்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.
கல்வெட்டு ஆய்வாளர்கள்
கல்வெட்டுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து அவற்றை காப்பாற்ற, கல்வெட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய பண்பாடு விழிப்புணர்வு நிகழ்வுகள் அவ்வபோது நடத்தப்பட வேண்டும். இன்னும் பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படவும், பொருள் உணரவும் பதிப்பிக்கப்படவும் வேண்டியிருப்பதால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்தது இரண்டு கல்வெட்டு ஆய்வாளர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப பதவி
மேற்கண்ட அனைத்து விசயங்களும் துறை ரீதியாக நடக்க வேண்டுமென்றால், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், புதிய பதவிகள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையில் 758 இடங்களை உருவாக்கும் ஒரு பரிந்துரை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இருப்பதால், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வுக்கென்று குறைந்தது 40 தொழில்நுட்ப பதவிகளை உருவாக்குவதென்பது உங்களுக்கு கடினமான விசயமாக இருக்காது" என்று கூறியிருந்தார்.
அமைச்சர் பதிலடி
இதற்கு தமிழில் அளித்த கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களே, தங்களுக்கு இந்தியாவின் கல்வெட்டு துறை பற்றிய அறியாமை உள்ளது. தமிழ் நாட்டின் அமைச்சர் தென்னரசு அவர்களின் அறிவை நான் மதிக்கிறேன். ஆனால், நமது பேச்சு கிணற்று தவளைப் போல் அல்லாமல், பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை 276449 ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
புரியாமை பிரச்சனை
இதையடுத்து பதிலடி கொடுத்த வெங்கடேசன் எம்பி, இந்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தமிழில் ட்வீட் செய்ததற்கு எனது பாராட்டுகள்.
இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமியுங்கள் என நான் கேட்டுள்ளேன். இதில் கிணறும் தவளையும் எங்கிருந்து வந்தன? எனது அறியாமையல்ல, உங்களின் புரியாமைதான் பிரச்சனை. தமிழ்நாட்டு அமைச்சர் தென்னரசுவின் அறிவை மதித்தமைக்கு நன்றி! வரலாற்றுக்கு அதன் முழுத்தன்மையோடு உயிரூட்டம் அளியுங்கள் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுதான் எங்களின் அறிவு மரபு" என்று கூறினார்,