நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா, பி.டி.உஷா நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ராஜ்யசபா நியமன எம்.பி. இளையராஜா உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு மத்திய அரசு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருதும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது.
கருணாநிதி என் அப்பா மாதிரி.. உருகிய இளையராஜா! அன்னைக்கு மோடியை பாராட்டினாரே.. திடீர்ன்னு என்னாச்சு?
சிம்பொனி நாயகன்
1976-ம் ஆண்டு அன்னக்கிளி எனும் தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இன்றுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழி திரைப்படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா. சிம்பொனி இசையின் மூலம் உலகை தன் வயப்படுத்தியவர் இளையராஜா.
அம்பேத்கருடன் ஒப்பீடு
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதி இருந்தார் இளையராஜா. அது மிகப் பெரும் சர்ச்சையானது. அப்போதே இளையராஜாவுக்கு ஏதோ ஒரு பதவியை மத்திய அரசு தரக் கூடும் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று இளையராஜா, நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
மோடி வாழ்த்து
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja
அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன.அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது - எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது.
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
இசைஞானி இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸின் ட்விட்டர் பதிவு: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். இசையால் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். இந்திய மக்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்தியவர். இது அவருக்கு சரியான அங்கீகாரம். அவர் இன்னும் உயர்ந்த அங்கீகாரங்களை பெறத் தகுதியானவர். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், கல்வியாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி சிறக்கட்டும்!
தொல்.திருமாவளவன் வாழ்த்து
இசைஞானி இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான திருமாவளவன் ட்வீட்: மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள #இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.