நீருக்கு அடியில் போகும் டிரோன், ஏஐ கேமரா, டிஜிட்டல் ஹெல்பர்! தொழில்நுட்பத்தின் உச்சமாக மகா கும்பமேளா
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு இன்று தொடங்குகிறது. இந்த மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு உத்தரப் பிரதேச அரசு செய்துள்ள பணிகள் குறித்து நாம் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராட ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனித சடங்கான ஷாஹி ஸ்னான் நாளை ஜனவரி 14ம் தேதி நடைபெறும் சூழலில், அதில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளா:
ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவில் சுமார் 45 கோடி பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்வுக்காகப் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு செய்துள்ளது.
டிரோன்:
குறிப்பாக முதல்முறையாக underwater drones எனப்படும் நீருக்கு அடியில் 100 மீட்டர் வரை டைவிங் செய்யும் திறன் கொண்ட டிரோன்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அண்டர் வாட்டர் டிரோன் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல முக்கியமான இடங்களைக் கண்காணிக்க 120 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய டிரோன்களும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும் மருத்துவ அல்லது பாதுகாப்பு தேவைகளைக் கண்காணித்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவுகிறது.
ஏஐ கேமரா:
மேலும், கும்பமேளா நிகழ்வில் கண்காணிப்பு பணிகளுக்கு அதிநவீன ஏஐ திறன் கொண்ட 2,700 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுழைவு பகுதிகளில் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சமூக வலைத்தளம் மூலம் எதாவது மிரட்டல் வருகிறதா என்பதைக் கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் சுமார் 56 சைபர் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் தங்குவதற்கு 150,000 கூடாரங்கள், தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்சம் 4.5 லட்சம் புதிய மின் இணைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு லட்சம் பேரைக் கொண்ட நகரத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் இந்த கும்பமேளாவில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போக்குவரத்து ஏற்பாடுகள்:
மேலும், பக்தர்கள் வசதிக்கு ஏற்ப போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகரம் முழுக்க பல மின்சார பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சார்பிலும் 98 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மகா கும்பமேளா சமயத்தில் இந்த ரயில்கள் சுமார் 3,300 டிரிப்களை மேற்கொள்ள உள்ளது. இது தவிர மகா கும்பமேளா நிகழ்வை முன்னிட்டு நகரில் 92 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. 30 பாலங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. 800 இடங்களில் பலமொழிகளில் அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தளவுக்கு அதிக மக்கள் ஒன்று கூடுவதால் தேவையான மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை வெறுமன முதலுதவி கூடாரங்களாக மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்குத் தேவையான வசதிகளைக் கொண்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏஐ சாட் போட்:
இது தவிர கும்பமேளா நிகழ்வுக்கு வருவோருக்கு ரியல் டைம் தகவல்களைப் பகிரப் புதிதாக கும்ப் சாஹ்'யாக் (Kumbh Sah'AI'yak) என்ற ஏஐ வசதி கொண்ட சாட் போட் உருவாக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாட் போட் பக்தர்களுக்கு ஒரு டிஜிட்டல் ஹெல்பர் போலச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை மகா கும்பமேளா 2025 செயலி மூலமாக அல்லது வாட்ஸ்அப் மூலமாகப் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications