2019க்காக மாபெரும் கூட்டணி அமைக்கும் எதிர்க்கட்சிகள்.. நாளை மீட்டிங்.. இறங்கி வரும் காங்கிரஸ்!
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி உருவாக்க இருக்கும் மாபெரும் கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுந்து இருக்கிறது.
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி உருவாக்க இருக்கும் மாபெரும் கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இதுகுறித்து நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோல்வி அடைய செய்ய எதிர்க்கட்சிகள் பலமான கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சீறிய முயற்சியில் இந்த கூட்டணி கொஞ்சம் வடிவம் பெற்றுள்ளது.
இந்த கட்சிகள் எல்லாம் நாளை பெரிய கூட்டம் நடத்த உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
கலந்து கொள்ள வாய்ப்பு
இந்த கூட்டத்தில் முக்கியமான எதிர்க்கட்சிகள் பல கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலுங்கானா, திமுக, ஆம் ஆத்மீ, மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற மாநில கட்சிகள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சில மனக்கசப்புகள்
ஏற்கனவே இந்த கூட்டணி உருவாவதில் சில மனக்கசப்புகள் இருந்தது. முக்கியமாக காங்கிரஸ் இதில் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் செயல்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
ஏற்கனவே இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரிய அதிர்ச்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் இவ்வளவு விரைவில் கூட்டணி வைக்க திட்டமில்லை என்றும் கூறி இருந்தது. இதனால்தான் ஏற்கனவே நடக்க திட்டமிடப்பட்டு இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த கூட்டம்தான் நாளை நடக்க உள்ளது.
காங்கிரஸ் முடிவு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, தற்போது கொஞ்சம் இறங்கி வர முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதன்படி பிரதமர் வேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம், ராகுல் காந்திதான் நிற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்று காங்கிரஸ் கூறப்போவதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து நாளை நடக்கும் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வருகிறது.