கருணாநிதி, ஜெ.க்கு கிடைத்த அதே வாய்ப்பு.. கைகூடி வருகிறது.. டெல்லியில் விட்டதை பிடிப்பாரா ஸ்டாலின்?
தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது.
டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கலந்து பெரிய சந்திப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.
இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கைகூடி வந்துள்ளது.
பிரதமர் பதவி
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது. 40 எம்.பி தொகுதிகளை கொண்டு இருக்கும் தமிழகத்தின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் இந்த பிரதமர் வேட்பாளர் தேர்வில் ஸ்டாலினின் குரல் முக்கியமானதாக பார்க்கப்படும். 2019க்கான பிரதமர் வேட்பாளரை ஸ்டாலினே கூட கைகாட்ட வாய்ப்பு இருக்கிறது.
காவிரி பிரச்சனை
அதேபோல் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை ஸ்டாலின் ஒரே மேடையில் சந்திக்கிறார். இதனால் ஸ்டாலின் இவர்களுடன் காவிரி பிரச்சனை குறித்தும் பேச வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் குமாரசாமியின் மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதால், இவர்கள் மூவரும் ஒரே மேடையில் சந்திப்பது காவிரி பிரச்சனையில் சில தீர்வுகளுக்கு முன்னெடுப்பாக இருக்கலாம். இதனால் மீண்டும் காவிரியில் திமுகவின் கை ஓங்க வாய்ப்பு உள்ளது.
மீண்டும் வருகிறது
ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு முக்கிய தலைவர்கள் தேசிய அரசியலில் எப்படி ஆதிக்கம் செலுத்தினார்களோ அதற்கு பின் இப்போது ஸ்டாலினுக்கும் அதேபோல் ஒரு வாய்ப்பு அமைந்து இருக்கிறது. காவிரி பிரச்சனை தொடங்கி பிரதமர் வேட்பாளர் வரை பல முக்கிய விஷயங்களில் திமுகவும் ஸ்டாலினும் மீண்டும் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசிய அளவில் ஸ்டாலினுக்கு தற்போது பெரிய அரசியல் வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஸ்டாலினுக்கு நடக்குமா?
இதற்கு முன் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது இல்லை. இத்தனை நாட்கள் சைலன்ட் மோடில் இருந்த ஸ்டாலின், இன்றில் இருந்து புதிய பாதையில் செல்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்துதான் அவரின் அரசியல் எதிர்காலம் உள்ளது.. திமுகவின் எதிர்காலமும்!