மகாராஷ்டிரா ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: மகாராஷ்டிராவில் தங்களுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கூடுதல் அவகாசம் வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மகாராஷ்ராவில் காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க முடிவு செய்த சிவசேனா கூடுதல் காலஅவகாசம் கேட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் அளிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மறுத்துவிட்டார்.
அத்துடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சி அமைக்க வழங்கிய கெடுவை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். இதனால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆளுநரின் முடிவினை எதிர்த்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆளுநரின் முடிவை அரசியலமைப்பிற்கு விரோதமானது, நியாயமற்றது என்று கூறி நேற்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை!
முன்னதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சம்னாவின் தலையங்கத்தில் "மகாராஷ்டிராவில் குதிரை பேரம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஜனாதிபதி ஆட்சி அந்த திசையை நோக்கி கொண்டு செல்கிறது. நாம் செல்லும் திசையைப் பற்றி அவர்கள் விமர்சித்தால் விமர்சித்துக்கொள்ளட்டும். அவர்கள் மெகபூபா முப்தி மற்றும் நிதீஷ் குமார் ஆகியோருடன் சென்றபோது என்ன நடந்தது?, வாக்குறுதியின்படி நடந்திருந்தால் நாம் இப்படி நடந்திருக்க மாட்டோம் அல்லவா? ஆனால் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு பதிலாக எதிர்க்கட்சியில் அமர விரும்புகிறார்கள்" என்று தலையங்கத்தில் கூறியிருந்தது.