மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்: பிரசாரத்துக்கே போகாத சீனியர் காங். தலைகள்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு செல்லாதது அக்கட்சி நிர்வாகிகளை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கு வரும் 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரசாரங்களை தொடங்கிவிட்டனர்.
இதனால் பாஜக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் தேர்தல் பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தேர்தல் நெருங்கிய நிலையிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா என பெரும் தலைகள் யாரும் பிரசாரத்துக்கே செல்லவில்லை.
ஐ.என்.எக்ஸ் வழக்கு: ஜாமீன் மனுவை நாளையே விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வலியுறுத்தல்
இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சியில் வெடித்திருக்கும் கோஷ்டிபூசல்தான் இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. ஹரியானாவில் முன்னாள் மாநில தலைவர் அசோக் தன்வாரின் ஆதரவாளர்கள் நேற்று கூட கட்சி தலைமையகத்தில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
மகாராஷ்டிராவில் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்களிடம் தேர்தல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மூத்த தலைவர்களின் பிரசாரங்கள் இல்லை என்பதால் காங்கிரஸ் தொன்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் பாஜகவே ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் இருப்பதாக களநிலவரங்கள் தெரிவிப்பதும் காங்கிரஸின் மந்தமான பிரசாரத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து.