நாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு? மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி?
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளும், தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன.
இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் மட்டுமின்றி, கடந்த 21ம் தேதி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலுக்கான முடிவுகளும் நாளை வெளியாகின்றன.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நாடித் துடிப்பை அறிய இந்த தேர்தல் முடிவுகள் உதவும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 மணிக்கு துவங்கும்
வாக்கு எண்ணிக்கை 24ம் தேதியான, நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. காலை 11 மணிக்கெல்லாம் முன்னிலை நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இரு மாநிலத்திலும் பாஜகதான் ஆட்சியில் உள்ளது.
மத்திய அரசு மீதான மதிப்பீடு
லோக்சபா பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின் சட்டமன்றங்களுக்கு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதான மக்களின் அபிப்ராயம் இந்த தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கூட்டணிகள்
மகாராஷ்டிராவில், பாஜக-சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கின. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை தனித்து களமிறங்கின.
நாங்குநேரி, விக்கிரவாண்டி
இதேபோல நாங்குநேரி ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி. மீண்டும், காங்கிரசே அங்கு போட்டியிட்டது. விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமிருந்தது. அங்கு மறுபடியும் திமுக களமிறங்கியது. ஆனால் இந்த இரு தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளை தவிர்த்துவிட்டு அதிமுக நேரடியாக களம் கண்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
சமீபத்தில் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள்படி, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், பாஜக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் நல்ல போட்டியை கொடுக்கும் என சில ஊடகங்கள் கூறுகின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.