தேர்தல் மாநிலங்களில் வேகமெடுக்கும் கொரோனா... அதிகாரிகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி
டெல்லி: தேர்தல் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, தேர்தல் அதிகாரிகளுக்கு முன் கூட்டியே கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், செப்டம்பர் மாதம் உச்சத்தைத் தொட்டது. அதன் பின், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.
இருப்பினும், நாட்டிலுள்ள சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இரு மாநிலங்கள்
இந்தியாவில் தற்போது 1,36,872 பேர் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 72% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் ஒட்டுமொத்த ஆக்டிவ் கேஸ்களில் 45% கேரளாவிலும் 27% மகாராஷ்டிராவிலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய ஆலோசனை
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவை விட கூடுதலாக மகாராஷ்டிராவில் அதிக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் மத்திய அரசின் சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார துறை, அங்கிருக்கும் கள நிலவரங்கள் பெற்று, அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷன், "தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் இருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
உருமாறிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் சுமார் 187 பேருக்குப் பிரிட்டன் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு தென்னாப்பிரிக்க வகை கொரோனாவும் ஒருவருக்குப் பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.