பட்னாவிஸுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், என்சிபி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் தாக்கல்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவின் புதிய அரசுக்கு எதிரான வழக்கில் பாஜக-என்சிபி (அஜித்பவார்) ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் 54 என்.சி.பி.எம். எல்.ஏக்களின் கையெழுத்துடன் அஜித்பவார் ஆளுநரிடம் கொடுத்த கடிதம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிராவில் திடீரென பாஜகவின் பட்னாவிஸுக்கு முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறி பட்னாவிஸுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதேபோல் என்சிபியின் அஜித் பவாருக்கும் துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி சரத்பவார் பிரிவு தரப்பில் உடனே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.
அத்துடன் பட்னாவிஸ் அரசுக்கான ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்கள் கடிதம், பட்னாவிஸை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் ஆகியவற்றை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய போது, பட்னாவிஸூக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம் மற்றும் 54 என்.சி.பி. எம்.எல்.ஏக்கள் கையெழுத்துடன் அஜித் பவார், ஆளுநர் கோஷ்யாரிடம் கொடுத்த கடிதம் ஆகியவற்றை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்.
இதனையடுத்துஅனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. பின்ன இவ்வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு வழங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.