"பலி ஆடு!" மகாராஷ்டிராவில் பாஜக ஏன் முதல்வர் பதவி ஏற்கவில்லை தெரியுமா! உடைக்கும் யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: மகாராஷ்டிராவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நீட்டித்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வாரமாக நீட்டித்த இந்த சூழல் இப்போதும் கூட தாக்கரே விரும்பியது போல முடியவில்லை.
பாழடைந்த மருத்துவமனை கட்டிடம்.. மும்பை போலீசுக்கு வந்த போன்! உள்ளே 4 பிணங்கள் -யார் எந்த மர்ம ஆண்?
கட்சி முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டில் இருந்ததாக நினைத்த தாக்கரேவுக்கு, கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்த நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.
மகாராஷ்டிரா
ஷிண்டே தரப்பு கடைசி வரை உறுதியாக இருந்தனர். மகாராஷ்டிரா ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றமும் ஆளுநரின் உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. இதனால் சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பின்னர் தாக்கரே தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்த்து இருந்த நிலையில், பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது
ட்விஸ்ட்
இன்று மாலை புதிய முதல்வர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான பணிகளும் விறுவிறுவென நடந்து வந்தது. இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் பதவி ஏற்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்தார். மேலும், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராகப் பதவியேற்பார் எனச் சொல்லி ஷாக் கொடுத்தார்.
பாஜக
பாஜகவில் ஒருவரே முதல்வர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை பெரிய ட்விஸ்ட்டாகவே பார்க்கப்படுகிறது. இதையடுத்து பட்னாவிஸை துணை முதல்வராக பதவியேற்கும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அதில் அவர் இறுதி முடிவை எடுக்கவில்லை. இந்தச் சூழலில் மகாராஷ்டிர முதல்வர் பதவியை பாஜக ஏன் ஏற்கவில்லை என்பதற்குப் பலரும் பல காரணங்களைச் சொல்லி வருகின்றனர்.
யஷ்வந்த் சின்ஹா
இதனிடையே இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கும் யஷ்வந்த் சின்ஹா சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, அவர் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு கோரி வருகிறார். அதன்படி இன்று சென்னை வந்த அவர், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
காரணம்
அதைத் தொடர்ந்து பேசிய அவர், "மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் இந்த நேரத்தில் நாம் இங்குப் பேசிக் கொண்டு இருக்கிறோம். பாஜக அங்கு முதல்வர் பதவியை ஏற்கவில்லை, ஏனென்றால் ஆட்சி நீட்டிக்காது என அவர்களுக்குத் தெரியும். இதனால் பலி ஆடாக ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்து உள்ளன. மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தைத் துளியும் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை ஒவ்வொன்றாக மீறி வருகின்றனர்.
ஆளுநர்கள்
ஆளுநரின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் செயல்பட வேண்டிய ஆளுநர்கள், பாஜக ஏஜெண்டாக செயல்படுகின்றனர். இதுவும் நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழலில் குடியரசுத் தலைவர் பதவி முக்கியமானதாக மாறுகிறது. இந்த நேரத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்.
முக்கியம்
அதாவது மகாராஷ்டிராவில் இப்போது அமைந்துள்ள பாஜக- சிவசேனா கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் இதன் காரணமாகவே சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வர் நாற்காலியில் அமர பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக சின்ஹா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சின்ஹவாவின் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.