வந்தாச்சு 150 ரூபாய் நினைவு நாணயம்.. நரேந்திர மோடி வெளியிட்டார்.. மகாத்மா காந்தி நினைவாக
டெல்லி: மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 150 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் முழுக்க வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, 150 ரூபாய் நினைவு நாணயத்தை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் பங்கேற்றார். சபர்மதி ஆசிரமத்தில் உள்ள குறிப்பேட்டில், பிரதமர் நரேந்திர மோடி தனது மெசேஜை எழுதினார். அதில், "காந்தியின் 150வது தினத்தில் நான் மிகவும் திருப்தியாக உள்ளேன். தூய்மை இந்தியா என்ற காந்தியின் கனவு நனவாகி கொண்டு இருக்கிறது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை இந்தியா நிறுத்தி விட்டது என்பதை இந்த தருணத்தில் நான் சொல்வதற்கு அதிர்ஷ்டம் செய்து உள்ளேன்." இவ்வாறு அந்தக் குறிப்பேட்டில் எழுதி உள்ளார்.
Ahmedabad: Prime Minister Narendra Modi releases commemorative Rs 150 coins, on the occasion of Mahatma Gandhi's 150th birth anniversary. #GandhiAt150 pic.twitter.com/JAvNpeUcjX
— ANI (@ANI) 2 October 2019
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சீக்கியர்களின் குருமார்களில் ஒருவரான குரு கோபிந்த் சிங்கின், 350வது பிறந்த தினத்தை முன்னிட்டு 350 ரூபாய் நினைவு நாணயத்தை மோடி வெளியிட்டார். இதேபோன்று கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக, 100 ரூபாய் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.