"சாதி" அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீடு வழங்க முடியாது.. சுப்ரீம்கோர்ட் அதிரடி.. அதிர்ந்து போன பாமக
வன்னியர்10.5% இடஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கிறது
டெல்லி: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்த நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன.. இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு இந்த சட்டத்தை இயற்றியது... இதற்கு பிறகுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது..
வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து..மேல்முறையீடு செய்த தமிழக அரசு, பாமக.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..!
அதிரடி தீர்ப்பு
10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு திமுக அரசும் அரசாணை வெளியிட்டு சட்டத்தை அமல்படுத்தியிருந்தது. ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது இதனை விசாரித்த நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர். சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்? என்று கேட்டிருந்தனர்.
செல்லாது
அப்படி முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது என்றும் தீர்ப்பளித்து வன்னியருக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தனர்.
அதிமுக
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், பாமக, சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது... இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இத்தனை மாதங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் முழு விசாரணையும் நிறைவடைந்தது.. ஆனால், தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது..
இன்று தீர்ப்பு
இந்நிலையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.எல்.கவாய் அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற ஆர்வமும் தமிழகத்தை சூழ்ந்திருந்தது.. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது... மேலும், 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது. எம்பிசி பிரிவில், வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேல்முறையீடு
மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை பல மாதங்களாகவே நடந்து வந்தது.. இந்த வழக்கின் எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை வலுவாக எடுத்து வைத்திருந்தனர். குறிப்பாக, "வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால், பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்....
வசதிகள்
அதுவும் இல்லாமல், வன்னியர் சமுதாய மக்கள், பிறருடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை நியாயப்படுத்த எந்த விளக்கமும் கிடையாது... வேண்டுமானால், அவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ, வசதிகளையோ செய்து தரலாமே தவிர, உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை" என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசு
ஆனால், இதற்கு தமிழக அரசு தரப்பு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது.. வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கு அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு இருக்கிறது என்றும், போதிய தரவுகள் இல்லை என்பதற்காகவே, அதனை நிராகரிக்கக் கூடாது என்றும் வாதிட்டது.. ஒருவேளை அப்படி பட்சத்தில், அது அந்த சமூகத்தின் வளர்ச்சியை வெகுவாகவே பாதிக்கும்.. அதனால் மதுரை ஹைகோர்ட் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டது.
நியாயமான காரணங்கள்
இப்படியான வாதங்கள் அனைத்துமே கடந்து மாதம் முடிந்துவிட்ட நிலையில்தான், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம்கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது... உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தெளிப்படுத்த வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் அரசியல் சாசனத்தின் 14,16 பிரிவுகளுக்கு விரோதமானது. வன்னியர்களை மட்டும் தனிப்பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது" என்று தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆணையம்
இந்த வழக்கில் மீண்டும் மேல் முறையீடு செய்யும் எண்ணம் பாமகவுக்கு இல்லை என்றும், மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்து, வன்னியர் சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்து, போதுமான தரவுகளை திரட்டி சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பாமக தரப்பில் கோரிக்கையாக சொல்லப்படுகிறது.
அன்புமணி
இதனிடையே, சுப்ரீம்கோரட்டின் இந்த தீர்ப்பு வன்னியர் அமைப்புகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக எம்பியும் பாமக இளைஞரணி செயலாளருமான அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்... செய்தியாளர்களிடம் அவர் சொல்லும்போது, "10.5% வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.. தமிழக அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து சட்டம் இயற்ற வேண்டும். வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும்.. போதுமான அளவு தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம்" என்று கூறியுள்ளார்.