பாஜகவுக்கு மெஜாரிட்டி... அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமிக்கு தலைவலி
டெல்லி: டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. பாஜக சார்பில் 435 வேட்பாளர்கள், காங்கிரஸ் சார்பில் 420 வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில், 340 க்கும் மேற்பட்ட தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 90 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
இன்றைய தேர்தல் முடிவுகளின் நிலவரத்தால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரின் எதிர்காலத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
குமாரசாமி வெள்ளிக்கிழமை வரை தான் முதலமைச்சராக நீடிப்பார் என்று முன்னாள் முதலமைச்சர் சதானந்தா கவுடா பேசியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் கர்நாடகத்தில் பாஜகவுக்கு சாதகமான பலம் கிடைத்திருப்பதால், அது மாநிலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதே போன்று, பா.ஜ.க. வெற்றிபெறும் பட்சத்தில் கெஜ்ரிவால் அரசுக்கு தலைவலியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த 2014 தேர்தலில் மோடி அலை என்ற கூறப்பட்ட நிலையில், இந்த தேர்தல் சுனாமியாக மாறியிருப்பது எதிர்க்கட்சியினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.