பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
டெல்லி: மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதுகுறித்து, மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது கருத்தை இன்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியா, காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் மத்திய அரசு, ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவுக்கு பலன்
அரசு அறிவிப்பின்படி, ரீபைன் செய்யப்பட்ட பாமாயில்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும், இதன்மூலம் கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம், மலேசியாவுக்குதான் வணிக ரீதியாக பாதிப்பு அதிகம். ஏனெனில் ரீபைன்ட் செய்யப்பட்ட பாமாயில்களை அதிகப்படியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது மலேசியா. ஆனால் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை மூலம் கச்சா பாமாயில்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க கூடிய இந்தோனேசியாவுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரகசிய தகவல்
முன்னதாக, இந்தியாவிலுள்ள, பாமாயில் ரீபைன்ட் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு தகவலை மத்திய அரசு பரிமாற்றம் செய்ததாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. மலேசியாவிலிருந்து பாமாயில்களை வாங்கக் கூடாது என்பதுதான் அந்த செய்தி.
உள்ளூர் தொழில்
இதில் மற்றொரு விஷயத்தையும் பார்க்கவேண்டி இருக்கிறது. ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி இல்லை என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக, இந்தியாவில் பாமாயில் ரீபைன் செய்யக் கூடிய தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். காய்கறி எண்ணெய் தயாரிப்புக்கும் ஊக்கம் கிடைக்கும்.
மலேசிய பொருளாதாரம்
மலேசிய பொருளாதாரத்தில் பாமாயில் ஏற்றுமதி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் அளவுக்கு பாமாயில் ஏற்றுமதி பங்களிப்பு வைக்கிறது. மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய மொத்த பொருட்களில் 4.5% பாமாயில் சார்ந்த பொருட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய நாடு
இதுகுறித்து மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, இன்று கூறுகையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. மலேசியா மிகவும் சின்ன நாடு. இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்து யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.