மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற மல்லிகார்ஜுன கார்கே.. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததால் அதிர்ச்சி
டெல்லி: மக்களவை தேர்தலில் மீண்டும் விஸ்வரூப வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்துள்ளார்.
கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் தலா 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் குல்பர்கே மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தோல்வியை சந்தித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று, தற்போது பாரதிய ஜனதாவின் வேட்பாளராக களமிறங்கிய உமேஷ் ஜாதவ் தோற்கடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. உமேஷ் யாதவ் சிஞ்சோலி பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டு எம்எல்ஏ ஆனவர். கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
இதனால் தற்போது சிஞ்சோலி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜகவில் சேர்ந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உமேஷ் ஜாதவ். அதே சமயம் 2 முறை குல்பர்கே தொகுதியில் களமிறங்கி வெற்றி கண்டதால் மல்லிகார்ஜுன கார்கே சற்று துணிச்சலுடனே இத்தேர்தலை எதிர் கொண்டார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாதகமாக வந்துள்ளது. தனது கட்சியில் தான் வளர்த்துவிட்ட ஒருவரே, எதிர் முகாமிற்கு சென்று தன்னை வீழ்த்துவார் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார் மல்லிகார்ஜுன கார்கே. கடைசியில் அது தான் நிகழ்ந்துள்ளது.
4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தட்டிவிட்ட அமமுக
பாஜக சார்பில் போட்டியிட்ட உமேஷ் 52.1 சதவீதம் அதாவது 6,20,192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மல்லிகார்ன கார்கே 44.1 சதவீதம் அதாவது 5,24,740 வாக்குகள் மட்டும பெற்று உமேஷ் ஜாதவிடம் தோல்வியை தழுவியுள்ளார்
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மோடி தூக்கு போட்டு கொள்ள தயாரா என பேசி மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது