கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி
டெல்லி: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் 4 இடங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 24 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் நடைபெற இருந்தது.
கொரோனா பாதிப்புகளால் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வரும் 19-ந் தேதியன்று ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் பல மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் களை கட்ட தொடங்கிவிட்டது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...? மருத்துவரிடம் கேட்டறிந்த முதலமைச்சர்
ஜே.டிஎஸ்.- காங்கிரஸ்
கர்நாடகாவில் மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் கிடைகும். காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஜேடிஎஸ்- கட்சிக்கு 1 சீட் கொடுக்க உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியில் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி, முனியப்பா உள்ளிட்ட பலரும் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்திருக்கிறார்.
சீனியர் கார்கேவுக்கு வாய்ப்பு
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் மல்லிகார்ஜூன கார்கே . 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். குல்பர்கா லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே தோல்வியைத் தழுவினார். ஆனாலும் கட்சியின் சீனியர் என்ற அடிப்படையில் தற்போது அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படுகிறது.
பாஜகவில் அக்கப்போர்
கர்நாடகாவில் பாஜகவிலும் ராஜ்யசபா சீட்டுக்கான அக்கப் போர் நீடிக்கிறது. கர்நாடகாவில் பாஜகவை வளர்த்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மனைவி தேஜஸ்வினி தமக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். ஆனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி
அதேநேரத்தில் இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதா மூர்த்தியை ராஜ்யசபா எம்.பி.யாக்குவது தொடர்பாக பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. பாஜகவின் உட்கட்சி பூசலை தவிர்க்க இத்தகைய தேர்வு சரியானதாகவும் இருக்கும் என்கின்றனர் பாஜக சீனியர் தலைவர்கள்.