கொல்கத்தாவில் 4-வது முறையாக மமதா பேரணி- டெல்லி ஜாமியா மாணவர்கள் மீண்டும் போராட்டம்
டெல்லி/கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று 4-வது முறையாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பிரமாண்ட பேரணியை நடத்தினார். டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாமில் தொடங்கிய இந்த எதிர்ப்பு கிளர்ச்சி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று 4-வது பேரணியை நடத்தினார். இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும் மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கறுப்புக் கொடி போராட்டத்தையும் நடத்தினர். அப்போது குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் டெல்லியில் தடை உத்தரவை மீறி இன்று ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். ஜாமியா பல்கலைக் கழகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கர்நாடகாவில் குடகு மற்றும் பெலகாவியில் இஸ்லாமிய அமைப்புகள் பிரமாண்ட பேரணியை நடத்தின.