மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- மே.வ. பெயரை பங்களா என மாற்ற அனுமதிக்க வலியுறுத்தல்!
டெல்லி: பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என மாற்றுவதற்கு அனுமதி கோரினார் மமதா பானர்ஜி.
மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தது முதல் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்ப்டுத்தி வந்தவர் மமதா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்து போட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.
ஃபானி புயல் பாதிப்பின் போது மமதாவுடன் ஆலோசனை நடத்த மோடி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை மமதா ஏற்க மறுத்ததால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மமதா- மோடி சந்திப்பு
இந்நிலையில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னை திடீரென கொல்கத்தா விமான நிலையத்தில் மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது ஜசோதாபென்னுக்கு சேலை ஒன்றை பரிசாக அளித்தார் மமதா பானர்ஜி. இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மேற்கு வங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இச்சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு குர்தா ஒன்றை பரிசாக வழங்கினார்.
மோடியிடம் 3 கோரிக்கைகள்
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: பிரதமர் மோடியுடனான இப்பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பிரதமர் மோடியிடம் மேற்கு வங்கம் தொடர்பாக 3 கோரிக்கைகளை முன்வைத்தேன்.
மே.வ. பெயர் மாற்றம்
மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என மாற்றுவது குறித்தும் மோடியுடன் ஆலோசனை நடத்தினேன். மேற்கு வங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ரூ13,000 கோடி முதலீடு செய்யபட உள்ளது.
துர்கா பூஜைக்கு வர அழைப்பு
பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது குறித்தும் மோடியுடன் விவாதித்தேன். மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தேன்.
அமித்ஷாவையும் சந்திப்பேன்
தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மோடியிடம் விவாதிக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கினால் அவரையும் சந்தித்து ஆலோசனை நடத்துவேன். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.