உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மல்லுக்கட்டி வருகிறார் மமதா பானர்ஜி. பிரதமர் மோடியை சந்தித்து பேச விரும்பவில்லை என்றெல்லாம் கூறினார்.
ஃபானி புயல் பாதிப்பின் போது மமதாவுடன் ஆலோசனை நடத்த மோடி முயற்சித்தார். ஆனால் மமதா பானர்ஜி இந்த அழைப்பை நிராகரித்திருந்தார். லோக்சபா தேர்தலின் போது மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த கையோடு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்தனர். இதனால் மமதா கடும் கோபத்தில் இருந்தார். மேலும் மமதா செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி வெறுப்பேற்றினர். இதனால் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுத்தார் மமதா பானர்ஜி. பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்- பாஜக தொண்டர்களிடையே பெரும் ரத்த களறியே ஏற்பட்டது.
கர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி
மோடி- மமதா சந்திப்பு
இந்நிலையில் டெல்லி சென்ற மமதா பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என மாற்றுவது; மேற்கு வங்கத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மமதா கூறினார்.
இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு
இதனையடுத்து இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா, உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவரை சந்தித்தேன்.
அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு
அஸ்ஸாமில் 19 லட்சம் மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கைகளால் நாடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். உண்மையான குடிமக்கள் அஸ்ஸாமில் விடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை குறித்து எதுவும் பேசவில்லை.
டிஜிட்டல் ரேசன் கார்டு
மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த எங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதேநேரத்தில் எங்கள் மாநிலத்தில் டிஜிட்டல் முறையில் ரேசன் கார்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்தோம் என்றார்.