எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.... மாறிமாறி விமர்சித்துக்கொள்ளும் பாஜக, திரிணாமுல் காங்.
டெல்லி: மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மம்தா பானர்ஜியை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் பாஜக திட்டவட்டமாக உள்ளது.
சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். மேலும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராகவும் மம்தாவுக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியும் தற்போது மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிரான தனது விமர்சனத்தைத் தொடங்கியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் இருக்கும் ஒன்பது கோடி விவசாயிகளுடன் நேற்று கலந்துரையாடினார்.
மே. வங்கத்தைச் சீரழித்தவர்
அப்போது பேசிய அவர், "மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகள் என்னதான் பேசி வருகிறார் என்பதைப் பாருங்கள். அவரது சித்தாந்தமே மேற்கு வங்கத்தைப் பாழாக்கிவிட்டது என்பது அப்போதுதான் உங்களுக்குத் தெரியும். சுயநலத்திற்காக அரசியல் செய்பவர்களைப் பொதுமக்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். மேற்கு வங்காள விவசாயிகளின் நன்மை குறித்துக் கவலைப்படாத கட்சிகள், டெல்லி குடிமக்களை விவசாயிகளின் நலன் என்ற பெயரில் துன்பப்படுத்துவதிலும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.
மம்தா பதிலடி
பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு உதவ மோடி அரசு எதுவும் செய்யவில்லை என்றார். மேலும், "ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 8,000 கோடி உள்ளிட்ட ரூ.85,000 கோடி நிலுவைத் தொகையில் ஒரு பகுதியைக்கூட அவர்கள் மே. வங்க அரசுக்கு அளிக்கவில்லை" என்றார்.
நலத்திட்டங்கள் சென்று சேருவதில்லை
மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து தாக்கிப் பேசிய பிரதமர் மோடி, "பிரதமரின் கிஷான் திட்டத்தால் முழு நாடும் பயனடைகிறது, ஆனால் மேற்கு வங்கம் மட்டுமே இந்த திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. இதன் விளைவாக, 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் பயனைப் பெற முடியவில்லை, மேலும் இந்த பணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான நடவடிக்கையாகும். இந்த திட்டத்தில் இணைய 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்காள விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர், ஆனால் சரிபார்க்கும் பணியை மம்தா அரசு நிறுத்தியுள்ளது" என்று விமர்சித்தார்.
அரசியல் செய்வது நானில்லை, பாஜகதான்
இதற்குப் பதிலளித்த மே. வங்க முதலவர் மம்தா, "நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். சொல்லப்போனால், நானே தனிப்பட்ட முறையில் இது குறித்து இரண்டு கடிதங்களை எழுதியுள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கூட பேசியிருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஆனால், இதை வைத்து அரசியல் செய்கின்றனர்.
மக்களே எனது குடும்பம்
மேலும், எனது சித்தாந்தம் மற்றும் வங்காள மக்களுக்கான எனது அர்ப்பணிப்பு குறித்து கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். எனது சித்தாந்தம் இந்த நாட்டை கட்டியெழுப்பியவர்களின் பார்வைக்கு ஒத்து இருக்கிறது. மாநிலத்திலுள்ள மக்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, மேற்கு வங்க மக்களே எனது குடும்பம்" என்றார்.