தேசத்துக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்... மம்தா பானர்ஜி தடாலடி
டெல்லி: நாட்டை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தான் தயாராகிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி இன்று 'ஜனநாயக பாதுகாப்பு பேரணி என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸைச் சேர்ந்த ஆன்ந்த் சர்மா, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீதராம் யெச்சூரி, தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) காங்கிரஸ் கட்சியுடனும், கம்யூனிஸ்டுகளுடனும் மாநில அளவில் சண்டை போட்டு வருகிறோம். ஆனால் ஒட்டு மொத்த தேசத்துக்கு ஆபத்தாக உள்ள பாஜகவை தோற்கடிக்க, கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்.
நாட்டில் இப்போது ஜனநாயகம் மோடி நாயகமாகியுள்ளது. எமர்ஜென்சி காலத்தில் இருந்ததைவிட மோசமான நிலையில் தற்போது நாடு இருக்கிறது. எல்லோருக்கும் கப்பர்சிங் படத்தை பற்றி தெரியும். தற்போது நாட்டில் இரண்டே கப்பார் சிங் தான் உள்ளனர்; ஒருவர் மோடி, மற்றொருவர் அமித்ஷா என்றார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமராக மோடி இருப்பது இன்று தான் கடைசி நாள். இனி அவர் வாழ்நாளில் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றும் கூறினார்.