மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் மமதா, நவீன் பட்நாயக், பினராயி விஜயன்.. பரபரப்பு விளக்கம்!
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். ஆனால் இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நாட்டின் பிரதமாக மோடி இன்று மீண்டும் பதவியேற்கிறார். இதற்கான விழா இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். சுமார் 8000 விருந்தினர்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!
மமதா புறக்கணிப்பு
இதற்கான விழா ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மமதா டிவிட்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ‘வாழ்த்துகள்.. புதிய பிரதமர் மோடி. மோடி, பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கு முடிவு செய்திருந்தேன். ஆனால், கடைசி ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் பாஜகவின் செய்திகளைப் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறானது.
அரசியல் ஆதாயம்
மேற்குவங்கத்தில் எந்த அரசியல் படுகொலைகளும் நடைபெறவில்லை. தனிப்பட்ட வெறுப்பு, குடும்ப பிரச்னைகளின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பிரச்னையால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம். அரசியலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மன்னியுங்கள் மோடி.. இந்த விவகாரம் பதவியேற்பு விழாவில் என்னை கலந்துகொள்ளவேண்டாம் என்று முடிவு எடுக்கவைத்துள்ளது. அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன். இவ்வாறு மமதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக் விளக்கம்
இதேபோல் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தான் பங்கேற்காததன் காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். அந்த விழாவில் நவீன் பட்நாயக் பங்கேற்க வேண்டும் என்பதால் டெல்லியில் நடைபெறும் மோடியின் பதவியேற்பு மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
விளக்கமளிக்காத பினராயி விஜயன்
இதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். கேரள அரசின் சார்பாக யாரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை கேரள முதல்வர் அலுவலகம் வெளியிடவில்லை.
திமுக எம்பிக்கள் புறக்கணிப்பு
இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் காரணமாக திமுக எம்பிக்கள் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.