முதல் கேஸ்.. மகன் பட்டாசு வெடித்ததற்கு தந்தை மீது வழக்கு போட்டது டெல்லி போலீஸ்!
டெல்லியில் சட்டவிரோதமாக பட்டாசு வெடித்த நபர் கைது செய்யப்பட்டார்.
டெல்லி: சட்டவிரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் நபர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகன் வெடித்த பட்டாசுக்கு அவனது தந்தை மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்து இருந்தது. அதன்படி தீபாவளி நேரத்தில் 2 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
[இப்படி பயந்து பயந்தா தீபாவளியை கொண்டாடுவது.. தமிழிசை வேதனை]
பெரும் அதிர்வலை
இந்த 2 மணி நேரத்தை மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 2 மணி நேரத்தை நிர்ணயித்து முதன்மையான நிபந்தனையை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
காதில் வாங்கவில்லை
இந்நிலையில், டெல்லியில் காசிபூர் என்ற பகுதி இருக்கிறது. இங்கு கடந்த வியாழக்கிழமை ஒரு சிறுவன் தன் அளவு கடந்த ஆசை காரணமாக நிறைய பட்டாசுகளை வெடித்து விட்டான். இதை வெடி சத்தத்தை கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இப்படியெல்லாம் வெடிக்க கூடாது, அது தவறு என்று சொல்லி எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள். ஆனால் சிறுவனோ பட்டாசை பார்த்த ஆசையில் எதையும் காதில் வாங்கிவில்லை. தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்தான்.
தந்தை கைது
இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் அளித்து விட்டார்கள். போலீசாரும் விரைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் செய்த தவறுக்கு அவரது தந்தையை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது எப்ஐஆரும் பதிவு செய்து விட்டார்கள்.
6 மாதம் சிறையா?
ஏற்கனவே சட்டவிராதமாக பட்டாசு வெடித்தால் 6 மாத தண்டனை என கோர்ட் சொல்லிவிட்டது. எனவே கைது செய்யப்பட்டவருக்கு கட்டாயம் 6 மாத தண்டனை கிடைக்கும் அல்லது அபராதம் ஏதேனும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் நேரக்கட்டுப்பாட்டுக்கு பிறகு, பட்டாசு வெடிப்பதில் பதிவாகும் முதல் வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.