பெண் மீது ஆசை.. வழிக்குக் கொண்டு வர.. 2 வயது மகனை கடத்திய இளைஞர்
டெல்லி: டெல்லியில் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் நபர், தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண்ணை வழிக்குக் கொண்டு வருவதற்காக அவரது 2 வயது மகனை கடத்திய செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சிவ் பூஜன் பண்டிட். கல்யாணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். 2 வருடத்திற்கு முன்பு வேலை தேடி டெல்லி வந்தார். அங்கு நஜப்கர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் ஒரு பெண் தனது 2 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் சிவ் கண்ணில் பட்டுள்ளார். அவர் மீது மையல் கொண்டார் சிவ்.
இதையடுத்து காமம் தலைக்கேற அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால் அப்பெண்ணோ இவரை கண்டு கொள்ளவே இல்லை. இருந்தாலும் விடாமல் தனது ஆசையை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதை அப்பெண் ஏற்கவில்லை, நிராகரித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவ் அப்பெணணை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என யோசித்துள்ளார். அப்போதுதான் பெண்ணின் குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டி பணிய வைப்பது என்ற முடிவுக்கு வந்தார்.
இதையடுத்து குழந்தையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அதன் பின்னர் அப்பெண்ணுக்கு போன் செய்து உனது குழந்தையை கடத்தி விட்டேன். குழந்தை வேணும்னா என் ஆசைக்குப் பணிய வேண்டும் என்று கூறியுள்ளார் சிவ். அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் சிவ் பேசிய எண்ணை டிரேஸ் செய்தபோது அது உபி மாநிலம் காஸியாபாத்தில் இருப்பதாக காட்டியது. அதன் பின்னர் போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை- கமல்ஹாசன்
இந்த நிலையில் மீண்டும் அப்பெண்ணுக்கு போன் வந்தது. அப்போது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு வருமாறு கூறியுள்ளார் சிவ். போலீஸார் இந்த எண்ணை டிரேஸ் செய்தபோது அது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்று காட்டியது.
இதையடுத்து ராஜஸ்தானுக்கு போலீஸ் படை விரைந்தது. புகார் கொடுத்த பெண்ணும் உடன் சென்றார். ராஜஸ்தானுக்குப் போன பிறகும் கூட இடத்தை மாற்றி மாற்றிப் பேசினார் சிவ். கடைசியாக ஜெய்ப்பூரில் உள்ள ஷியாம் நகரிலிருந்து போன் வந்தது. அந்த இடத்திற்கு விரைந்த போலீஸார் இந்த முறை சிவ் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.
குறிப்பிட்ட வீட்டை அடைந்து கதவைத் தட்டியபோது கையில் குழந்தையுடன் சிவ் கதவைத் திறந்தார். வெளியில் போலீஸாரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிவ், குழந்தையை முதல் மாடியிலிருந்து கீழே வீசப் பார்த்தார். ஆனால் போலீஸார் சுதாரித்து குழந்தையை பிடித்துக் கொண்டனர். சிவ்வும் வளைத்து பிடிக்கப்பட்டார்.
ஆசைப்பட்ட பெண்ணை அடைய அவரது குழந்தையைக் கடத்திய இந்த கிறுக்குப் பிடித்த இளைஞரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.