குடும்ப சுமையால் மனைவி குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பிரகாஷ்- குர்கான் பயங்கரம்
குர்கானில் கெமிக்கல் எஞ்சினியர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை கொன்று விட்டு தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பம் நடத்த வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளார
டெல்லி: குடும்பத்தில் ஏற்பட்ட சுமையால் பிஎச்டி படித்து டாக்டர் ஒருவர் மனைவி குழந்தைகளை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு நள்ளிரவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் பிரகாஷ் சிங் பிஎச்டி முடித்து விட்டு ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவரது மனைவி சோனு சிங், 22 வயதான மகள் அதிதி, 13 வயாதான மகன் ஆதித்யா உடன் சந்தோசமாகவே குடும்பம் நகர்ந்தது. குர்கானில் இவர்கள் குடும்பம் செட்டிலாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஞாயிறு இரவுதான் அவர்களுக்கு கடைசி இரவாகிப் போனது.
திங்கட்கிழமை காலையில் வீட்டில் நடமாட்டம் எதுவும் இல்லாமல் போகவே சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் கூறினர். சம்பவ வீட்டிற்கு வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.
சோனு, அதிதி, ஆதித்யா ஆகியோர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பக்கத்தில் இருந்த சீலிங் பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் பிரகாஷ். அவர்கள் வளர்த்த நான்கு நாய்களும் பரிதாபமாக அமர்ந்திருந்தன. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பிவைத்தனர்.
மூன்று பேரின் உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன. தலையிலும் அடிபட்டு ரத்தம் வழிந்தோடியிருந்தது. நள்ளிரவு 2 மணியளவில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே மூன்று பேரின் உயிரும் பிரிந்துவிட்டது.
பிரகாஷின் பாக்கெட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில், குடும்பம் நடத்த வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருக்கிறார். பிஎச்டி படித்து விட்டு நல்ல வேலையில் இருப்பவர் தற்கொலை செய்வதற்கான காரணம் என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது பிரகாஷ் எழுதிய கடிதம்தானா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்து விட்டு தற்கொலை போல செட்அப் செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.