மேன் vs ஒயில்டு.. பேர் க்ரில்சுடன் மோடி.. காட்டுப் பகுதி அனுபவங்கள்!
டெல்லி: பேர் க்ரில்ஸின் மேன் vs ஒயில்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றதன் பிகைன்ட் த சீன்ஸ் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டின் ராணுவத்தின் சிறப்புப் படைகளில் பங்காற்றிய பேர் க்ரில்ஸ், டிஸ்கவரி சேனலின் மிகப் பிரபலம் ஆவார். மலை, காடு, பாலைவனம், பனி, கடல் என உலகின் எந்தப் பகுதியிலும் தனித்து விடப்பட்டால் அந்த சூழல்களில் உயிர் தப்புவது எப்படி என்பதை தனது ராணுவ பயிற்சியின் பின் புலத்தை வைத்து செய்து காட்டுவது தான் இவரது மேன் vs ஒயில்டு நிகழ்ச்சி.
இவரது இந்த survival skills நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்று பல சாகஸங்களை செய்துள்ளார். உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள மாபெரும் காட்டுப் பகுதியான ஜிம் கார்பெட் தேசிய வனப் பூங்காவில் மோடி க்ரில்ஸுடன் ஒரு நாளை செலவிட்டுள்ளார்.
வரும் 12ம் தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை ஷூட் செய்போது திரைக்கு பின்னால் க்ரில்ஸ், மோடிக்கு இடையே நடந்த உரையாடல்கள், சாகஸங்களின் பின்னணியில் நடந்த சம்பவங்களின் வீடியோ வெளியாகியுள்ளது. மோடி காட்டுப்பகுதிக்கு வந்ததும் இந்தியாவின் மிக முக்கிய மனிதரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது எனது கடமை என்று க்ரில்ஸ் சொல்வதாக அந்த வீடியோ தொடங்குகிறது.
தலைக்கு மேல் வேலை உள்ளபோதிலும், வயாதானாலும் மோடி ஒரு இளைஞருக்கு உள்ள துடிப்புடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். காட்டில் மிருகங்கள் ஏதாவது வந்தால் தற்காத்துக் கொள்ள ஒரு ஆயுதத்தை செய்து அதை மோடியின் கையில் கொடுக்கிறார் க்ரில்ஸ். அதை வாங்கிக் கொண்ட மோடியோ ஒரு உயிரை எடுக்க எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. உங்களுக்காக இந்த ஆயுதத்தை நான் வைத்துக் கொள்கிறேன் என்கிறார்.
மேலும் தனக்கு 17, 18 வயது இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறி இமய மலையில் சுற்றித் திரிந்த அனுபவத்தையும் மோடி க்ரில்ஸிடம் கூறியுள்ளார். காட்டுப் பகுதியை ஆபத்தானது என்று நினைக்கக் கூடாது. நாம் இயற்கைக்கு எதிராக திரும்பினால் அனைத்துமே ஆபத்தானதாகிவிடும். ஏன் மனிதர்கள் கூட ஆபத்தானவர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் நாம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் இயற்கை அன்னையும் நமக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்று க்ரில்ஸிடம் விளக்கியுள்ளார் மோடி.
மோடி க்ரில்ஸிடம் மேலும் கூறியதாவது,
வெளியாட்கள் யாரும் இந்தியாவை சுத்தம் செய்ய முடியாது. இந்திய மக்கள் தான் தங்களின் தேசத்தை சுத்தப்படுத்த வேண்டும். தனி நபர் சுத்தம் என்பது இந்திய மக்களின் கலாச்சாரத்திலேயே உள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தை நாம் ஏன் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக மகாத்மா காந்தி நிறைய செய்துள்ளார். அவர் வழியில் சென்று நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பேர் க்ரில்ஸுடன் சேர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் அலாஸ்கா பனிப் பிரதேசத்தில் சாகஸங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.