நான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா
டெல்லி: நான் அரசியலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா விரும்பினார் என பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.
நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்மூலம் பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்கு புதிய சேதி ஏதேனும் சொல்கிறாரா என்ற கேள்வி காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா, உலகம் முன்னெப்போதையும்விட இன்று நெல்சன் மண்டேலா போன்றவர்களை அதிகம் இழந்துவருகிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்திற்கு ஒரு சான்றாக திகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அதே பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரியங்கா நெல்சன் மண்டேலாவை 'அங்கிள்’ என அழைத்து அவர் தனது உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்றும் வேறுயாரையும் விட நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
The world misses men like #NelsonMandela more than ever today. His life was a testament to truth, love and freedom.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 18, 2019
To me, he was Uncle Nelson (who told me I ought to be in politics long before anyone else did!). He will always be my insipration and my guide. pic.twitter.com/JaPeHkT69g
நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளில் அவரது இந்த பதிவு காங்கிரஸ் கட்சியினருக்கு பல தகவல்களை கூறுவதாக தோன்றுகிறது. அதாவது கடந்த மக்களவை தேர்தலின்போது நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு வசதியாக அவருக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டபோது ராகுலும், கட்சியும் அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் பதவி விலகினார். ராஜினாமா கடிதம் எழுதிய ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு தனது குடும்பத்தினர் அல்லாத ஒருவரை தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இது அப்போதே தான் பதவிக்கு வர விரும்பவில்லை என்பதை கூற அவருக்கு உரிமை உண்டு, அதே வேளையில் தனது குடும்பத்தில் இருந்து யாரையும் தேர்வு செய்யக் கூடாது என ஏன் கூறுகிறார், என்ற கேள்விகள் அப்போதே காங்கிரஸ் வட்டாரத்தில் பட்டமடித்து பறந்து வந்தது.
இந்த நிலையில்தான் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு தலைமைப் பொறுப்புக்கு பிரியங்காவை கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரியங்கா பொறுப்பேற்க வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தார். லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், கட்சிக்கு பிரியங்கா தலைமையேற்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் வேண்டுகோளை பிரியங்கா நிராகரிக்கக் கூடாது.
தனது பாட்டி இந்திரா காந்தி போல, காங்கிரஸூக்கு மிகப்பெரிய வெற்றியை பிரியங்காவால்தான் பெற்றுத் தர முடியும் என அபிஜித் முகர்ஜி கூறினார். இவரது கோரிக்கை இப்படி இருக்க முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி வெளியிட்டுள்ள டிவீட்டில் இக்கட்டான இத்தருணத்தில் காங்கிரஸூக்கு தலைமையேற்க தகுதியான நபர் பிரியங்காதான். அவரை கட்சித் தலைவர் பதவிக்கு கட்சியின் மேலிடம் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இவரை தொடர்ந்து மூன்று முறை மக்களவை எம்பியாக இருந்த பக்தா சரண் தாஸ் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிரியங்கா காந்தியை தான். இந்த கட்சியின் தலைவராக அவர் வரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரிக்கை வைப்போம்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறாக காங்கிரசில் பிரியங்காவை தலைமைப் பதவிக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் சூழலில் பிரியங்காவின் இந்த டிவிட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. "நான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என நெல்சன் மண்டேலா விரும்பினார் என்று கூறுவதன் மூலம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தான் சாதிக்க காத்திருப்பதாகவே அவர் கூறுகிறார். புரிந்து கொள்ளுமா காங்கிரஸ் கட்சி.