ஹர்ஷ்வர்தனை நோக்கி ஓடிய மாணிக்கம் தாகூர்.. பாய்ந்து வந்த பாஜக எம்பிக்கள்! லோக்சபாவில் பெரும் கலாட்டா
டெல்லி: பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசிய ஒரு வார்த்தை தொடர்பாக லோக்சபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.
சமீபத்தில் டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில், பிரதமர் வெளியே வர முடியாத நிலை ஏற்படப் போகிறது. வேலை கிடைக்காத இளைஞர்கள் கோபத்தில் உள்ளனர். அவர்கள், கம்பால் மோடியை அடிக்க தயங்கமாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்த விவகாரத்துக்கு பதிலடி அளிக்கும் விதமாக, லோக்சபாவில் நேற்று மோடி பேசுகையில், ராகுல் காந்தியை ட்யூப்லைட் என்று பொருள்படும் வகையில் தாக்கி பேசினார்.
மோடி வீட்டை விட்டே வெளியே வர முடியாது.. இளைஞர்கள் குச்சியால் அடிப்பார்கள்.. ராகுல் காந்தி பரபரப்பு!
கோஷம்
இந்த நிலையில், லோக்சபாவில், ராகுல் காந்தி பேச்சு குறித்த சர்ச்சை இன்று வெடித்தது. பாஜக எம்பிக்கள் ராகுலுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மத்திய அமைச்சர், ஹர்ஷ் வர்தன், லோக்சபாவில் பேசுகையில், பிரதமருக்கு எதிராக மோடி பேசிய இந்த வார்த்தையை நான் கண்டிக்கிறேன் என்றார். ஆனால் ராகுல் காந்தி வயநாடு மருத்துவ கல்லூரி குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், அமைச்சர் அரசியல் பேசுகிறார் என்று குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்பிக்கள் எழுந்து நின்று, அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.
மாணிக்கம் தாகூர்
மேலும், ஹர்ஷ் வர்த்தன், இருக்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர். அதில் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்பியான, மாணிக்கம் தாகூரும் ஒருவர். இவர் ஹர்ஷ் வர்த்தனுக்கு மிக அருகே சென்றதும், பாஜக எம்பிக்கள், அமைச்சரை சுற்றி பாதுகாப்பு வளையம் போல மாறி நின்றனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது மாணிக் தாகூர் தள்ளிவிடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சபாநாயகரிடம் புகார்
இரு தரப்பு எம்பிக்களும் கோஷத்தை அதிகரித்ததும், பகல் 1 மணிக்கு அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதன் நடுவே, ராகுல் காந்தி மற்றும், காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் சபாநாயகரை சந்தித்து, மாணிக் தாகூர் கையாளப்பட்ட விதம் குறித்து, முறையிட்டனர்.
இதன்பிறகு 1 மணிக்கு மறுபடியும் அவை கூடியபோதும், கூச்சல் குழப்பம் நீடித்ததால், அவையை 2 மணிக்கு ஒத்தி வைத்தார், சபாநாயகர். ஆனால் மீண்டும் இதே பிரச்சினையால் அமளி நிலவியது. எனவே, அவையை திங்கள்கிழமைக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
ராகுல் காந்தி பேட்டி
இதன்பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய, ராகுல் காந்தி கூறியதாவது: வயநாடு பகுதியில், மருத்துவக் கல்லூரி இல்லாதது குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், ஹர்ஷ்வர்த்தன், அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். நான் பேசினால் பாஜகவுக்கு அது பிடிக்காது. நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. மணிக்கம் தாகூர் எந்த தவறும் செய்யவில்லை. வீடியோவை பாருங்கள் தெரியும். மாணிக்கம் தாகூர் யாரையும் தாக்கவில்லை, மாறாக அவர் தாக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
|
பாஜக குற்றச்சாட்டு
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், பிரகலாத் ஜோஷி கூறுகையில், கம்பை எடுத்து பிரதமரை அடிப்பார்கள் என ராகுல் காந்தி பேசினார். எனவே, இப்போது காங்கிரஸ் எம்பிக்கள் வன்முறையை கையில் எடுக்க தொடங்கிவிட்டனர். ஹர்ஷவர்த்தனை தள்ளிவிட முயற்சி நடந்தது. காங்கிரசின் விரக்தி மற்றும் அவர்களின் குண்டாகிரியை இந்த சம்பவம் விளக்குகிறது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.