ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மன்மோகன்சிங்?
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வந்தார் மன்மோகன்சிங். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் பெரும்பகுதியை பாஜக வளைத்துப் போட்டது.
126 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இருந்து மன்மோகன்சிங்கை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து திமுக உதவியுடன் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் இதற்கு ஒப்புக் கொண்ட திமுக தலைமை பின்னர் காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்நிலையில் ராஜஸ்தான், உ.பி.யில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஆகஸ்ட் 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பாஜக எம்.பி.யாக இருந்த மதன்லால் சைனி கடந்த ஜூனில் காலமானார். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி எம்.பியான முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு தாவியதால் காலி இடம் ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்துக்கு மீண்டும் நீரஜ் சேகர் போட்டியிடுகிறார். அவர் பாஜக எம்.பி.யாக மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார். ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு மன்மோகன்சிங்கை காங்கிரஸ் நிறுத்துகிறது. மன்மோகன்சிங் போட்டியிட்டால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளது காங்கிரஸ்.