10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்
டெல்லி: 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கடந்த 30 ஆண்டுகளாக ராஜ்யசபா எம்பியாக தொடர்ந்தார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவர் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம் பெறமாட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த மாநிலத்திலிருந்தே தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன் 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் தலைவராகவும் இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
எம்பி
அஸ்ஸாம் மாநிலத்தில் மன்மோகன் சிங்கை எம்பியாக தேர்வு செய்ய வேண்டுமானால் அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 43 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் இருப்பதோ 25 எம்எல்ஏக்கள். எனவே மன்மோகன் சிங் மீண்டும் அந்த மாநிலத்திலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்படமாட்டார்.
போதிய எம்எல்ஏக்கள்
மாநிலங்களவையில் மொத்தம் 9 இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஒடிஸாவில் 4 இடங்களும், தமிழகத்தில் ஒரு இடமும், பீகார் மாநிலத்தில் 2 இடங்களும் குஜராத் மாநிலத்தில் 2 இடங்களும் உள்ளன. எனவே காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மாநிலத்தில் மட்டும் ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்ய போதிய எம்எல்ஏக்கள் உள்ளனர்.
முடிவு
ஆனால் இந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்படும் அளவுக்கு காலியிடம் இல்லை. அது போல் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து சிங்கை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம் என்றால் அங்கு ஏற்கெனவே அப்பதவியில் ஆட்கள் உள்ளனர். இதனால் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் இவர் வரும் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இடம் பெறமாட்டார்.
திமுக ஒத்துழைக்கவில்லை
தமிழகம் சார்பில் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய ஒரு திட்டம் காங்கிரஸிடம் இருந்தது. அதற்கு திமுக ஒத்துழைக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் மன்மோகன் சிங்கிற்கு இனி ராஜ்யசபா பதவியில்லை என்பது உறுதியாகிவிட்டது.