கொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்
டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், தற்போது தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, அனுமி உள்ளிட்டவற்றில் எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் விவரித்துள்ளார்.
தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி? எதற்கெல்லாம் தடை? முழு விவரம்
மன்மோகன் சிங் கடிதம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில், இதுவரை எத்தனை பேருக்கு இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பதைப் பார்த்து நாம் பெருமை கொள்ளத் தேவையில்லை, அதற்குப் பதிலாக இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா தற்போது அதன் மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. சரியான நடவடிக்கைகளை எடுத்தால் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியும்.
தடுப்பூசி ஆர்டர்
இந்தியாவில் அடுத்த அறு மாதங்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகள் எந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது, அவை எவ்வாறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஆகியவற்றை மத்திய அரசு விளக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்ட காலத்தில் இத்தனை பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் நமது ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியும். மேலும், முன்கூட்டியே ஆர்டர் செய்வதன் மூலம் தடுப்பூசி தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும்.
தடுப்பூசி விநியோகம்
மத்திய அரசு 10% தடுப்பூசிகளை அவசர தேவைக்கு வைத்துக் கொள்ளலாம், இருப்பினும், மற்றவை எப்படி விநியோகிக்கப்படும் என்றும் அவை எப்படிக் கிடைக்கும் என்பதையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
நாட்டில் தற்போது 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பை இன்னும் தெளிவு படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், பஸ் மற்றும் டாக்சி டிரைவர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் 45 வயதுக்கும் கீழ் இருந்தாலும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். மேலும், முன்களப் பணி யார் என்பதை வரையறுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும்.
கட்டாய லைசென்ஸ் முறை
இந்தியாவில் தான் தற்போது அதிகளவிலான மருந்துகளைத் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு அரசின் கொள்கைகள் கைகொடுத்திருக்கிறது. இருப்பினும், தற்போதுள்ள அவசர நிலையைக் கருத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிக்க மருந்து நிறுவனங்களுக்குத் தேவையான நிதி மற்றும் மானியங்களை அரசு வழங்க வேண்டும். மேலும், சட்டத்தில் கட்டாய லைசென்ஸ் முறைகளை அரசு செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு லைசென்ஸ் மூலம், பல நிறுவனங்கள் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். எச்ஐவி எய்ட்ஸ் பரவிய போது நாட்டில் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. ஏற்கனவே இஸ்ரேல் இப்போது இந்த முறையை அமல்படுத்தியுள்ளது, இந்தியாவிலும் இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வெளிநாட்டு தடுப்பூசிகள்
உள்நாட்டுத் தடுப்பூசிக் குறைவாகவே உள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மருத்துவ அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள மருந்துகளை இந்தியாவில் எவ்வித தடையுமின்றி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தற்போது மிகப் பெரிய இக்கட்டான நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு இந்த தளர்வை நாம் அறிவிக்கலாம், அரசு எனது பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் என நம்புகிறேன்" என்று மன்மோகன் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.