"மோடியை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் மன்மோகன்சிங்!" : கெஜ்ரிவால் பாராட்டு!
"மோடியைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் மன்மோகன்சிங்," என அவருக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறி இருக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசுக்கு எதிராக காந்தியவாதியான அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மன்மோகன் சிங்கை பாராட்டித் தள்ளியுள்ளார் அர்விந்த் கேஜ்ரிவால்.
மன்மோகன் சிங் குறித்து கேஜ்ரிவால் குறிப்பிடுகையில்" பிரதமராக மோடியைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் மன்மோகன் சிங். மிகவும் நல்லவர். கல்வி அறிவு மிகுந்தவர். சிறந்த பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை நன்கு உணர்ந்து கொண்டவர்.
ஜி.கே.வாசன் என்ன செய்கிறார்.. என்ன செய்ய போகிறார்.. என்ன செய்ய வாய்ப்புண்டு?
2008ம் ஆண்டு உலகப் பொருளாதார சரிவின்போது மன்மோகன் சிங் தக்க சமயத்தில் நடவடிக்கைகளை எடுத்து நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றினார். மேலும், அவர் எடுத்த சரியான முடிவுகள் காரணமாக, உலகிலேயே பொருளாதார சரிவின் தாக்கம் இல்லாமல் தப்பித்த ஒரே நாடு இந்தியாதான்.
எங்களது ஊழலுக்கு எதிரான இயக்ககம் என்பது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராகவும், லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு செயல்பட்டது. ஒருவேளை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, லோக்பால் சட்டத்தை அமல்படுத்தி இருந்தால், ஆம் ஆத்மி கட்சியே பிறந்திருக்காது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி ஏன் லோக்பால் சட்டத்தை கொண்டு வரவில்லை. அவர்கள் லோக்பால் சட்டத்தை அமல்படுத்தி இருந்தால் பெரிய அளவில் நற்பெயரை பெற்றிருக்க முடியும். ஆம் ஆத்மி கட்சியும் துவங்கப்பட்டிருக்காது என்று கூறியுள்ளார்.
மோடி பற்றிய கேள்விக்கு,"மோடி மீண்டும் பிரதமரானால் அது இந்தியாவுக்கு கெட்டதாகவே கருதமுடியும். முக்கிய துறைகளில் அவர் குறிப்பிடத்தக்க அளவு எதையும் செய்யவில்லை. முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார். அதனால்தான் போலி தேசியவாதத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
மோடியின் தேசியவாதம் போலியானது. அது நாட்டிற்கு ஆபத்தானதும் கூட. எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்பதால், ராணுவத்தை பயன்படுத்தி ஓட்டுக்களை பெற முயற்சித்து வருகிறார்," என்று கேஜ்ரிவால் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு காந்தியவாதியான அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை துவங்கினார். அன்னா ஹசாரேவுக்கு நாடுமுழுவதும் பேராதரவு எழுந்தது. அன்னா ஹசாரே போராட்ட இயக்கத்தில் முக்கிய புள்ளியாக அர்விந்த் கேஜ்ரிவால் செயல்பட்டு வந்தார்.
அன்னா ஹசாரே நடத்திய போராட்டங்கள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. காங்கிரஸ் ஆட்சி வீழ்வதற்கு, பிரதமர் மோடி ஆட்சியை பிடிப்பதற்கும் அன்னா ஹசாரே போராட்டமும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
அன்னா ஹசாரேவின் வலது கரமாக இருந்து வந்த அர்விந்த் கேஜ்ரிவால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தீவிர அரசியலில் புகுந்தார். ஆம் ஆத்மி கட்சியை துவங்கி டெல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில், மன்மோகன் சிங்கிற்கு எதிராக ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய கேஜ்ரிவாலே இன்று அவரை பாராட்டித் தள்ளியுள்ளார்.