டிரம்ப் உடன் நாளை இரவு விருந்து.. புறக்கணிக்கிறார் மன்மோகன் சிங்... இதுதான் காரணம்!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரமப் பங்கேற்கும் அரசின் விருந்தில் நாளை கலந்து கொள்ள மாட்டார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இரவு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விருந்து வைக்கிறார். இந்த விருந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மத்திய அரசு பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் என்பதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கிற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.ஆனால் பல எதிர்க்கட்சி தலைவர்கள் விருந்து நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
முக்கியமாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்காதாதால் அந்த கட்சி வருத்தம் அடைந்துள்ளது. இந்த சூழலில் நாளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரமப் பங்கேற்கும் அரசின் விருந்தை புறக்கணிக்க மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் டிரம்பிற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே எந்த சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் இந்தியா பயணத்தை முடிக்கு போது நாளை இரவு விருந்துக்குப் பிறகு அதாவது செவ்வாய்கிழமை இரவு 10 மணி அளவில் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.