மனோகர் பாரிக்கர் ரொம்ப சீரியஸ்.. கடவுள் ஆசிர்வாதத்தால் வாழ்வதாக துணை சபாநாயகர் உருக்கம்
Recommended Video
டெல்லி:கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
அவ்வப்பொழுது உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது.
இதனால் மூக்கில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் மாநில சட்டமன்றத்தின் துணைத் தலைவர் மைக்கேல் லோபோ, மனோகர் பாரிக்கர் மிகவும் உடல்நலம் குன்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:குணப்படுத்த முடியாத நோயால் மனோகர் பாரிக்கர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடவுளின் அருளால் இன்னும் உயிருடன் உள்ளார். மனோகர் பாரிக்கரைப் பதவியில் இருந்து நீக்கினாலோ, அவருக்கு ஏதேனும் நேர்ந்தாலோ பாஜக கூட்டணி அரசுக்குச் சிக்கல் ஏற்படும். முதல்வராக அவர் நீடிக்கும் வரை எந்தச் சிக்கலும் எழாது என்றும் தெரிவித்தார்.