கோவா பாஜகவின் முகம்.. ஐஐடியில் படித்த நாட்டின் முதல் சிஎம்.. மிஸ் யூ மனோகர் பாரிக்கர்!
டெல்லி: கணைய புற்றுநோயால் காலமான மனோகர் பாரிக்கர் 2 முறை கோவா முதல்வராகவும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை எடுத்துக் கொண்டு மூக்கில் பொருத்தப்பட்ட டியூப்புடன் மக்கள் பணியாற்றி வந்தார்.
அவரது உடல் நிலை இன்று மாலை மிகவும் மோசமானது. இதை கோவா மாநில அரசே ட்விட்டரில் உறுதி செய்தது. இந்த நிலையில், இரவு 8 மணியளவில் பாரிக்கரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்... அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
சிறு வயதில்
கோவாவில் 1955ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி பிறந்த மனோகர் பாரிக்கர் , மும்பை ஐஐடியில் பொறியியல் படித்தார். சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் மீதான ஈர்ப்பின் காரணமாக அந்த இயக்கத்தில் சேர்ந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்
பின்னர் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து கோவா சட்டசபைக்கு 1994-இல் தேர்வு செய்யப்பட்டார். ஐஐடியில் படித்துவிட்டு எம்எல்ஏவாக பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் இவர். நவம்பர் 1999 -ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
மீண்டும் தேர்வு
முதல் முறையாக கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவரது பதவிக்காலம் 2002-ஆம் ஆண்டு வரை மட்டுமே நீடித்தது. இதையடுத்து அதே ஆண்டு ஜூன் மாதம் அவர் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
பாதுகாப்பு துறை
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பனாஜி தொகுதியில் வெற்றி பெற்ற பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். அகஸ்டா வெஸ்ட்லாந்து விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலை விசாரிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
ஆடியோ உரையாடல்
இதையடுத்து கோவா சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாத நிலையில் அங்கிருந்த சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்தது. இதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி கோவா முதல்வராக பதவியேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவா பாஜக எம்எல்ஏ பேசுவது போன்ற ஒரு ஆடியோ உரையாடலில் ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் மனோகர் பாரிக்கரின் படுக்கை அறையில் உள்ளது என கூறப்பட்டதை அடுத்து சர்ச்சை எழுந்தது.
ராகுலுக்கு பாரிக்கர் கடிதம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகர் பாரிக்கரை மரியாதை நிமித்தமாக பார்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னிடம் ரபேல் ஒப்பந்தம் குறித்து பாரிக்கர் கூறியதாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதை மறுத்த பாரிக்கர், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை வைத்து அரசியல் செய்யாதீர் என ராகுலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் கணைய புற்றுநோயால் இன்று உயிரிழந்தார் மனோகர் பாரிக்கர். இவரது மனைவி மேத்தா கடந்த 2001-ஆம் ஆண்டு காலமானார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர்.