பல தடுப்பூசிகள் விரைவில் ரெடி.. ஆயுர்வேதம் மூலம் நோயெதிர்ப்பு அதிகரிப்பு.. பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: வரும் காலங்களில் இன்னும் பல தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு இந்தியா அளிக்கவுள்ளது என்று உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாடு தற்போது ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இதுவரை சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட பலர் உரையாற்றியுள்ளனர்.
இந்த மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். கொரோனா பரவல், இந்தியாவின் தடுப்பூசி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் பேசினார்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தினோம்
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "130 கோடி இந்தியர்களின் சார்பாக உலக நாடுகளுக்கு நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தியா கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் கணித்தனர் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என்று அவர்கள் கூறினர். ஆனால், அது போல எதுவும் நடக்கவில்லை. பொது மக்களின் பங்களிப்புடன் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளோம்.
தடுப்பூசி
கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு உயிரிழப்பைக் குறைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போதுள்ள ஆக்டிவ் கேஸ்களையும் நாங்கள் குறைத்துள்ளோம். கொரோனா காலகட்டத்தில் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரித்து, அவற்றை பிற நாடுகளுக்கும் வழங்கி உதவினோம். வெறும் 12 நாட்களில் 23 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளோம். வரும் சில மாதங்களில் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த கட்டமாகப் பலவீனமாக உள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இந்தியாவின் தடுப்பூசி
கொரோனா தொற்று இந்தியாவைத் தாக்கியபோது அது ஒரு சவாலான கட்டமாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் தற்போது தயாராக உள்ளது. இந்த தடுப்பூசிகள் விரைவில் உலகிற்குக் கிடைக்கும். வரவிருக்கும் காலத்தில் இந்தியாவிலிருந்து பல தடுப்பூசிகள். மேலும், ஆயுர்வேதத்தின் உதவியுடன் மக்களின் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்துள்ளோம்.
யுபிஐ முறை
இந்தியாவின் தற்சார்பு இந்தியா திட்டம் உலகமயமாக்கலுக்கு பெரூதவியாக இருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி உலக பொருளாதார அமைப்பின் நிபுணர்களுக்கு ஆர்வமாக உள்ளது. வங்கிகள், தொலைப்பேசிகள் அனைத்தும் ஆதார் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் மட்டும் யுபிஐ முறை மூலம் 4 டிரில்லியன் ரூபாய் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளும் யுபிஐ செயல்முறையை தங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்த முயல்கின்றன.
MSME தெழில்பிரிவினார்
கொரோனா காலத்தில் 1.8 டிரில்லியன் ரூபாய் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எங்களின் தற்சார்பு இந்தியா திட்டம் உலக தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள் மூலம் MSME தெழில்பிரிவினார் எளிதில் கடன் பெறுகின்றனர். ஈ-மார்க்கெட் மூலம் அரசுடன் இணைந்து MSME தெழில்பிரிவுனரும் கொள்முதல் செய்கின்றனர்.
உள்கட்டமைப்பு தேவைகள்
2040 ஆம் ஆண்டில் நாட்டின் உள்கட்டமைப்பு தேவைகள் சுமார் 4.5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும். அரசும் தொழில்துறையும் இணைந்து இந்த இலக்கை அடையும் என்று நம்புகிறேன். தொழில் நடைபெற நிலையான சூழலை அமைக்கவும் அனைத்து உதவிகளையும் வழங்கவும் அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்கட்டமைப்பே விரிவுபடுத்துவதே அரசின் முக்கிய நோக்கம். கடந்த 6 ஆண்டுகளாக இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்படும். மேலும் பல சீர்திருத்தச் சட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
நகர்ப்புற பொருளாதாரம்
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளன. நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் 2/3 பங்கு நகரங்களிலிருந்தே வருகின்றன. நகர் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் 25 நகரங்களில் மெட்ரோ சேவை செயல்படுத்தப்படும் இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது" என்றார்.