கொரோனா: லாக்டவுன் விஷயத்தை ரொம்ப பேர் சீரியசாகவே எடுத்துக்கலையே.. மோடி கவலை
டெல்லி: கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் பொதுமக்கள் இயல்பாக நடமாடுவது கவலைக்குரியதாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கொரோனா தாக்கம் உள்ள 75 மாவட்டங்களை முடக்குவது என முடிவெடுக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் இதில் அடங்கும். ஆனால் மத்திய அரசு முடக்குவதற்கு பரிந்துரைத்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை எப்போதும் போல் இருந்து வருகிறது. எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இது நாடு முழுவதும் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் இது தொடர்பாக அறிவுறுத்தல்களையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இதுபற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
"முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் நடமாடுவது கவலையளிக்கிறது. அரசின் எச்சரிக்கையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தங்களை வீடுகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்" என்று மோடி கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பான விதிகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.