பாகிஸ்தானை உரசியதும், இந்துக்களை இழுத்ததும் மட்டும் இல்லைங்க.. பாஜக மாஸ் வெற்றிக்கு காரணம் வேற
டெல்லி: பாஜக கூட்டணி பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம், மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட வாக்குகளும், பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடியும் தான் என்று பரவலாக கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு.. அதுவும், தொடர்ந்து அடுத்த முறையும் மோடி அரசே, தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவுக்கான ஒரு வெற்றிக்கு.. காரணம் இது மட்டுமே கிடையாது.
மோடி தலைமையிலான பாஜக, கடந்த தேர்தலை விடவும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கு இவை தவிரவும், மற்றும் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அங்குதான் எதிர்க்கட்சிகள் கூட்டணி கோட்டை விட்டுள்ளது என்று சொல்லலாம்.
பாலக்கோட், பகுதியில் இந்திய விமானப்படை, பாக். தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே, இந்த தேர்தலில் பாஜகதான் அமோக வெற்றி பெறும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. எப்படி என்று பாருங்கள்:
மத்திய அமைச்சர் பதவி எனக்கா? சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்
உத்தரபிரதேசம் கணக்கு
பெரும்பாலானோர் கூறினார்கள் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் அமைத்த கூட்டணிக்கு பாஜகவால் பதில் சொல்ல முடியாது என்று.. ஆனால் இந்த கூட்டணிக்கு எல்லாம் மசிய கூடிய இடத்தில் பாஜக இல்லை. அது கடந்த தேர்தலிலேயே விசுவரூபமெடுத்து வளர்ந்து விட்டது என்பதை பலரும் கணிக்கத் தவறி விட்டனர். இப்போது தேர்தல் முடிவுகளும் அகிலேஷ் மாயாவதியின் கூட்டணிக்கு பெரும் அடியை கொடுத்துள்ளது.
நம்பகத்தன்மை இல்லை
இதேபோலத்தான், நாடு முழுக்கவுமே எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசினார்களே தவிர, அனைவரும் இணைந்து ஓரணியில் நிற்கவில்லை. இது இவர்கள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்விக்கு வாக்களிக்கும் நாள் வரை கூட, இந்த எதிர்க்கட்சிகள் விடை அளிக்கவில்லை என்பது தான் பெரும் சிக்கல்.
மோடி செல்வாக்கு
2018 ஆம் ஆண்டு வாக்கில், ஓரளவுக்கு பாஜக செல்வாக்கு சரிந்தது. அதை பல மாநிலத் தேர்தல்கள் நமக்கு உணர்த்தின. ஆனால் அந்தக் காலகட்டத்தில் கூட மோடி என்ற தனிநபர் மீதான புகழுக்கு எந்தப் பங்கமும் வரவில்லை. மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எந்த ஒரு தலைவரையும் முன் நிறுத்த முடியவில்லை. மோடிக்கு பப்ளிசிட்டி பலம் கூடிக் கொண்டே சென்ற நிலையில், அவருடன் ஒரே தராசில் வைத்து பார்க்கும் அளவுக்கு ராகுல் காந்தியால் வளர முடியவில்லை.
தனி நபர் பிம்பம்
இந்த வாக்குகள் அனைத்தும் பாஜக என்ற கட்சிக்காக கிடைத்தவை கிடையாது. மோடி என்ற ஒற்றை நபருக்காக கிடைத்தது என்பதைத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. லோக் நீதி அமைப்பு, நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின் போது, பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 32% பேர், மோடி மட்டும் பிரதமர் வேட்பாளராக இல்லாவிட்டால், தாங்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதுதான் தனிநபர் இமேஜ் மீதான இந்த நாட்டின் மனநிலை. தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கும் இப்படி ஒரு இமேஜ் இருந்ததை மறுக்க முடியாது. மக்களின் இதுபோன்ற மனநிலைதான், அம்மா உப்பு, அம்மா குடிநீர் என பல பிராண்ட்டை ஜெயலலிதா தனது பெயரில் பிரபலப்படுத்த காரணமாகவும் அமைந்தது.
திறமையான கட்டமைப்பு
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கட்டமைப்பு வேறு எந்த கட்சியையும் விட பல மடங்கு மேம்பட்டதாகச் உள்ளது. நுழையவே முடியாது என்று கருதப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கால் பதிப்பதற்கு, பாஜகவின் திறமையான நிர்வாகிகளும், அதன் கட்டமைப்பும் தான் காரணம். 2016ம் ஆண்டு அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் மூலமாக வடகிழக்கில் கால்பதிக்கத் தொடங்கிய பாஜகவின் வளர்ச்சியை இன்றுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அது மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து என அனைத்து இடங்களிலும் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, காங்கிரசை வேரோடு அழித்து விட்டது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு பாஜக கடும் போட்டியாக விஸ்வரூபமெடுத்துள்ளது 2017 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலின் போதே, பார்த்த விஷயம் தான். எனவே பாகிஸ்தானுடனான உரசலும், இந்துக்களை ஒருங்கிணைத்தது, மட்டுமே பாஜகவின் வெற்றி காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது.
காங்கிரசின் தோல்விகள்
பொதுவெளியில் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் காங்கிரஸ் பலநேரம் தோல்வியை தழுவியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு அறிவிப்பு, ஜாதி மற்றும் மத ரீதியான மோதல்கள் அதிகரிப்பு போன்ற விஷயங்களில் மக்களை காங்கிரஸ் திரட்டி ஒன்றிணைக்க முடியவில்லை. ரோகித்வெமுலா தற்கொலை, விவசாயிகள் போராட்டம், தலித்துகள் போராட்டம் போன்ற மக்களும், சமூக அமைப்புகளும் முன்னெடுத்த போராட்டத்தை கூட தங்களுக்கு சாதகமாக ஒருங்கிணைத்து கொள்வதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்கள் தான் பாஜகவின் வெற்றிக்கு காரணமே தவிர, பாலக்கோட் தாக்குதல்தான், காரணம், என்று நினைத்தால் எதிர்க்கட்சிகள் இனியும் தேற முடியாது, என்பதுதான் நிதர்சனம்.