ராகுல், முலாயம், மேனகா காந்தி.. விஐபி வேட்பாளர்கள் வெற்றி ரொம்ப கஷ்டம்.. ஷாக்கிங் எக்ஸிட் போல்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி உள்ளிட்டோருக்கு, இந்த தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கட்சி வேறுபாடின்றி, பெரிய தலைவர்களுக்கு இந்த தேர்தல் அக்னிப்பரிட்சையாக மாறி உள்ளது என்பதைத்தான் எக்ஸிட் போல் ரிசல்ட்கள் புடம் போட்டு விளக்குகின்றன.
ஏழு கட்டங்களாக, நடைபெற்று லோக்சபா தேர்தல்கள், முடிவடைந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின.
நியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
முலாயம்சிங் யாதவ்
விஐபி தொகுதிகள் என்று பார்த்தோமானால், உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரி லோக்சபா தொகுதியில், முலாயம் சிங் யாதவ் வெற்றி வாய்ப்பு என்ன என்பது தொடர்பாக இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் தகவல் சுவாரசியமாக உள்ளது. பாஜக சார்பில் முலாயம் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பிரேம் சிங் சாக்யா, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மணிப்பூரி தொகுதி
1996 முதலே மணிப்பூரி தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கையில்தான் உள்ளது. ஆனால் இந்த முறை பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று கருத்துக் கணிப்பு முடிவு, தெரிவிக்கின்றது. முலாயம்சிங் யாதவுக்கு கண்டிப்பாக இது சவாலான தேர்தல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மேனகா காந்தி நிலை
இதே உத்திரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூர் லோக்சபா தொகுதியில், மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு, பகுஜன் சமாஜ் கட்சி கடும் சவாலாக இருக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. மிகக் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான், மேனகா காந்தி வெற்றி பெறமுடியும் என்று கருத்துக் கணிப்பு கூறுவதால் அங்கு முடிவுகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம்.
ராகுல் காந்தி
மற்றொரு சுவாரசிய தகவல், அமேதி தொகுதி பற்றியது. இங்கு ராகுல் காந்திக்கு பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி கடுமையான போட்டியை கொடுப்பார், என்கிறது இந்தியா டுடே சர்வே. ராகுல் காந்தி தான் வெற்றி பெறுவார் என்றாலும், வாக்கு வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இம்முறை வாக்கு வித்தியாசம் குறையும் என்ற கருத்துக் கணிப்பு காங். வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.