குடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்
டெல்லி: குடியுரிமை (திருத்த) மசோதா 2019 என்பது "பிளவுபடுத்தும், பாரபட்சமான, அரசியலமைப்பிற்கு முரணானது" என்று அழைக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 600 க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள், முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினருக்கு மூன்று அண்டை நாடுகளிலிருந்து குடியுரிமை வழங்குவதாக உறுதியளிக்கும் மசோதாவை திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் எழுத்தாளர்கள் நயன்தாரா சாகல், அருந்ததி ராய் மற்றும் அமிதாவ் கோஷ், டி.எம்.கிருஷ்ணா, சுதிர் பட்வர்தன் மற்றும் நீலிமா ஷேக் போன்ற கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்களான அபர்ணா சென், நந்திதா தாஸ், ஆனந்த் பட்வர்தன், ரோமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக் மற்றும் ராமச்சந்திர குஹா போன்ற அறிஞர்கள், தீஸ்தா செதல்வாட், ஹர்ஷ் மந்தர், அருணா ராய் மற்றும் பெஸ்வாடா வில்சன் போன்ற சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. ஷா, யோகேந்திர யாதவ், ஜி.என். தேவி, நந்தினி சுந்தர் மற்றும் வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்தியாவின் அரசியலமைப்பு "பாலினம், சாதி, மதம், வர்க்கம், சமூகம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமத்துவத்தின் அடிப்படைகளை வலியுறுத்துகிறது" என்று கூறும் புத்திஜீவிகள், "குடியுரிமை (திருத்த) மசோதா மற்றும் நாடு தழுவிய என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகிய இரண்டும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சொல்லமுடியாத துன்பத்தை கொண்டு வருபவை. இது இந்திய குடியரசின் தன்மையை, அடிப்படையை சரிசெய்யமுடியாமல் சேதப்படுத்தும் " என்று எச்சரித்துள்ளனர்.
இதனால்தான் மனசாட்சியுள்ள அனைத்து குடிமக்களும், அரசு இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறார்கள். அரசு அரசியலமைப்புக்கு துரோகம் செய்ய கூடாது என்று அவர்கள் கோருகிறார்கள், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய குடியுரிமை (திருத்த) மசோதா, சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பிறகு, திங்கள்கிழமை நள்ளிரவில், மக்களவையில் நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாதிட்டன. இது முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் இந்திய தேசிய குடியுரிமையை வழங்குவதற்கான சட்ட வழியை உருவாக்கும்.
இந்த மசோதா 2015 க்கு முன்னர் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லீமல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க முன்மொழிகிறது. நாடாளுமன்றத்திற்குள், எதிர்க்கட்சிகளும், பல நகரங்களில் எதிர்ப்பாளர்களும், இந்த மசோதா முஸ்லீம்களுக்கு பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி போராடி வருகிறார்கள்.