முடிவுக்கு வருகிறதா மாவோயிஸ்டுகள் அத்தியாயம்? தலைவர் முப்பல்ல லட்சுமண ராவ் எனும் கணபதி சரணடைகிறார்?
டெல்லி: மாவோயிஸ்டுகள் அமைப்பின் தலைவரான முப்பல்ல லட்சுமண ராவ் எனும் கணபதி அரசிடம் சரணடைய முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியாவில் அரசுக்கு எதிரான சித்தாந்த ரீதியான ஆயுத இயக்கமாக இயங்கி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். நாட்டின் மத்திய பகுதிகளின் வனப்பகுதிகளையும் ஆதி பழங்குடி மக்களையும் தங்களது பாதுகாப்பு அரணாக அமைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.
நாட்டின் மத்திய மாவட்டங்களில் பெரும்பாலானவற்றை ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் காலமும் தகவல் தொழில்நுட்பமும் விஸ்வரூபம் எடுக்க, ஆதிகுடிகளின் வாழ்வியலிலும் மாற்றங்கள் ஏற்பட மாவோயிஸ்டுகளின் பிடி தளர்ந்து கொண்டே வருகிறது.
மாவோயிஸ்டுகளின் நேரடி சித்தாந்த எதிரியான வலதுசாரிகள் இந்தியாவில் அடுத்தடுத்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து வருகின்றனர். ஆனால் மாவோயிஸ்டுகளால் இந்த அரசுக்கு எதிரான எந்த ஒரு நகர்வையும் மேற்கொள்ள இயலாத கையாலாகத நிலையில்தான் இருக்கின்றனர். இது மாவோயிஸ்டுகளின் ஆகப் பெரும் பலவீனமாகவே கருதப்படுகிறது.
கர்நாடகா அரசுக்கு சவால்விடும் போதை மருந்து கடத்தல் கும்பல்- ஒழிக்கப்படுவது எப்போது சாத்தியம்?
இந்த நிலையில் மாவோயிஸ்டுகளின் முதுபெரும் தலைவரான முப்பல்ல லட்சுமண ராவ் எனும் கணபதி அரசாங்கத்திடம் சரணடைய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கணபதியின் தலைக்கு ஏற்கனவே அரசுகள் சுமார் ரூ2.15 கோடி விலை நிர்ணயித்திருக்கும் நிலையில்தான் இந்த முடிவை கணபதி தரப்பு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சத்தீஸ்கர்- ஒடிஷா வனப்பகுதிகளைவிட்டு வெளியேவர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் கணபதி. அப்படி கணபதி அரசாங்கத்ஹிடம் சரணடைந்தால் இந்தியாவில் மாவோயிஸ்டுகள் எனும் ஆயுதந்தாங்கிய புரட்சிகர இயக்கத்தின் இறுதி அத்தியாயம் நெருங்கிவிட்டதாகவே அர்த்தம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.