மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்… ஒடிசாவில் 15 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை
டெல்லி: ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக, அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று 91 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தவிர ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவும் நடைபெற்றது.
இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலால் அடுத்த கட்ட தேர்தலில் இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதே நேரம், தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் என்ற மக்களவைத் தொகுதியில் கின்னஸ் சாதனையாக 12 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே தேர்தல்.. அதே வாக்குப்பதிவு.. 2014 போலவே நடந்த 2019 முதற்கட்ட தேர்தல்.. வாவ் புள்ளி விவரம்!
வாக்குப்பதிவு இல்லை
நேற்று ஒடிசாவில் காலை முதல் நபரங்பூர், கோரபுத், கலஹந்தி, பெர்ஹாம்பூர் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக மால்கன்கிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 15 பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்
இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் நேற்று 17 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இடங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டது. அங்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிவு பெற்றது. மற்ற பகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைய பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடித்தது
இதேபோன்று, மகாராஷ்டிர மாநிலம் வாகேசரி என்ற வாக்குச்சாவடி அருகே 150 மீட்டர் தொலைவில் காலை 10 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கூடுதல் பாதுகாப்பு
வாக்காளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.