இந்தி திணிப்பு.. யுவனின் ஒரே போட்டோ.. தமிழர்களுக்கு ஆதரவாக குதித்த மராத்தி, பீகாரி மக்கள்.. பின்னணி!
டெல்லி: இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்கள் இணையத்தில் செய்து வரும் டிரெண்டிற்கு மகாராஷ்டிரா, பீகார் போன்ற வட இந்தியாவை சேர்ந்த சிலரும் ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
Recommended Video
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு பிரச்சாரங்கள் எழுந்து வருகிறது.கடந்த சில தினங்கள் முன் சென்னை ஏர்போர்ட்டில் திமுக எம்பி கனிமொழியிடம் காவலர் ஒருவர் இந்தி தெரியாதா என்று கேட்டது பெரிய சர்ச்சை ஆனது. திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை.
இதை தொடர்ந்து நேற்று முதல் நாள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்திக்கு எதிராக ''நான் தமிழ் பேசும் இந்தியன்'' என்று டி சர்ட் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பலர் வந்தனர்
இவரை தொடர்ந்து இணையத்தில் நடிகர்கள், பிரபலங்கள் பலர் ''நான் தமிழ் பேசும் இந்தியன்'' என்றும், இந்தி தெரியாது போடா என்றும் டி சர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டனர். இதனால் இணையத்தில் #இந்தி_தெரியாது_போடா டேக் வைரலாக தொடங்கியது . நாள் முழுக்க இதில் தமிழர்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக டிவிட் செய்து வந்தனர்.
தமிழகம்
நேற்று தமிழர்கள் இந்திக்கு எதிராக தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தமிழகத்தோடு முடியவில்லை. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் காட்டுத்தீ போல இந்த பிரச்சாரம் பரவியது. தமிழகத்திற்கு அடுத்து முதலில் கர்நாடகாவில்தான் பலர் இந்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். இந்தி திணிப்பை எந்த வகையிலும் ஏற்க மாட்டோம். தமிழர்களின் இந்த டிரெண்டிற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று பிரச்சாரம் செய்தனர்.
குரல் கொடுத்தனர்
ஒரு பக்கம் கர்நாடக மக்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த நிலையில் இன்னொரு பக்கம் மராத்தியர்களும் இந்தி திணிப்பை எதிர்த்து உள்ளனர். தமிழர்கள் இந்திக்கு எதிராக பேசுகிறார்கள். தென்னிந்தியர்கள் ஒன்றாக சேர்ந்து வந்து இப்படி குரல் கொடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.தென்னிந்தியர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்று மராத்தி பேசும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மராத்தி மக்கள்
ஒரு பக்கம் மராத்தி மக்களும் இந்த டிரெண்டில் ஐக்கியம் ஆகிவிட்டனர். இந்திக்கு எதிராக அவர்களும் குரல் கொடுக்க தொடங்கி விட்டனர். எங்கள் மைதிலி மொழியை நாங்கள் தொலைத்துவிட்டோம். தமிழர்கள் போல இந்தி திணிப்பை எதிர்த்து இருந்தால் மைதிலி இப்படி மோசமான நிலையை அடைந்து இருக்காது. மராத்தி போல மைதிலி மொழியும் வழக்கொழிய தொடங்கிவிட்டது என்று பீகாரிகள் பலர் கூறியுள்ளனர்.
கொல்கத்தா மக்கள்
அதேபோல் கொல்கத்தாவை சேர்ந்த பலரும் கூட இந்த டிரெண்டில் கைகோர்த்து உள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த முன்னணி மாணவ அமைப்புகள், பத்திரிகையாளர்கள் பலர் இந்திக்கு எதிராக, பெங்காலிக்கு ஆதரவாக நேற்று டிவிட்களை செய்து வந்தனர். அதிலும் #இந்தி_தெரியாது_போடா டேக்கில் பலரும் இதற்கு ஆதாரவாக டிரெண்ட் செய்தனர். எப்போதும் போல மலையாளிகள், தெலுங்கு மக்களும் இந்த டிரெண்டில் ஐக்கியம் ஆனார்கள்.
எதிர்ப்பு பிரச்சாரம்
இதனால் தேசிய அளவில் இந்தி திணிப்பிற்கு எதிராக பல்வேறு மாநில மக்கள் களமிறங்கி உள்ளனர். தமிழர்கள் மட்டுமே முன்னெடுத்து வந்த இந்த பிரச்சாரத்தை தற்போது பிற மாநில மக்களும் முன்னெடுக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவே நேற்று #இந்தி_தெரியாது_போடா டேக் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.