காஷ்மீர் மக்களே! தனி நாடு கோராதீர்.. இந்தியா- பாகிஸ்தான் இணைப்பை கேளுங்கள்.. கட்ஜு
டெல்லி: தனி காஷ்மீர் வேண்டும் என காஷ்மீர்வாசிகள் கூறுவது தவறு. அதற்கு பதிலாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புங்கள் என உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற மூத்த நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் காஷ்மீர் மக்களே உங்கள் முதுகில் ஏறி அரசியல்வாதிகளும் பிரிவினைவாத தலைவர்களும் சவாரி செய்கின்றனர். தீவிரவாதிகள் தைரியசாலிகள்தான். ஆனால் அவர்களுக்கு மண்டையில் ஒன்றும் இல்லை.
நடைமுறை சாத்தியங்கள் எதையும் அறியாமல் நீங்கள் பாட்டுக்கு சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் தனிநாடு கோருமாறு கற்பிக்கப்பட்டுள்ளீர்கள். காஷ்மீர் மக்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களை நான் எப்போதும் கண்டித்துள்ளேன்.
ஆனால் தனி நாடு என்ற உங்களது முழக்கம் தவறு. அதற்கு பதிலாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வையுங்கள். மதவாதத்தையும் சகிப்புத்தன்மையின்மையும் மதசார்பற்ற அரசால் பொறுத்து கொள்ள முடியாது. இந்துவாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தாலே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்ப்பு காணப்படும். இது ஒன்றுதான் தீர்வு. மதசார்பற்ற இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்க வேண்டும். இந்திய ஒருங்கிணைப்பு சங்கத்தை அண்மையில் ஏற்படுத்தியுள்ளோம். அதன் தலைவர் காஷ்மீரியான நான்தான்.
indianreunificationassociation.weebly.com என்பதுதான் எங்கள் அமைப்பின் இணையதள பக்கமாகும். இதற்கு பேஸ்புக் பக்கமும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைப்பது குறித்து [email protected] என்ற ஈமெயிலுக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
To all Kashmiris
— Markandey Katju (@mkatju) February 13, 2019
You have been taken for a ride by your politicians and the separatist leaders. pic.twitter.com/ji6annuT4z