மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு பிரஷர் ஷீட்... பெற்றோர்களுக்கு பிரெஸ்டீஜ் ஷீட் - பிரதமர் மோடி
தேர்வுகளும், மதிப்பெண்களும்தான் ஒரு மாணவனுடைய அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளோடு உரையாடும் போது நீ என்ன கற்றாய் என்று கேட்பதில்லை,மாறாக எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்றுதான் கேட்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு பிரஷர் ஷீட் ஆக மாறிவிட்டது. அதே மார்க் ஷீட் பெற்றோர்களுக்கு பிரெஸ்டீஜ் ஷீட் ஆக உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கல்விக்கொள்கை மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி '21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' என்ற தலைப்பில் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். ஏற்கனவே முதல் நாளில் மாநில அரசுகளுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து புதிய கல்வி கொள்கை குறித்து மோடி இன்று உரையாற்றினார்.
கடந்த 30 ஆண்டில் உலகில் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது. புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும். புதிய கல்விக் கொள்கைக்காக ஐந்து ஆண்டுகள் உழைத்தும் பணி இன்னும் முடியவில்லை.
புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மழலைக்கல்வியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொரோனா முடிஞ்சது! எதுக்கு லாக்டவுன்?தேர்தல் பேரணி நடத்துங்க.. சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்
புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும். கல்விக்கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம். 2022ஆம் ஆண்டுக்குள் புதிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
புதிய கல்விக் கொள்கையால் பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும். இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும்.
எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள கல்விக்கொள்கை வாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்களின் உள்ளம், அறிவை அறிவியல் பூர்வமாக வளர்க்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இன்றைக்கு மார்க் ஷீட் என்பது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் பிரஷர் ஷீட் ஆக மாறிவிட்டது. காரணம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் என்ன கற்றுக்கொண்டாய் என்று கேட்பதை விட எவ்வளவு மதிப்பெண் எடுத்தாய் என்றுதான் கேட்கின்றனர். அதேபோல பிள்ளைகளின் மார்க் ஷீட் பெற்றோர்களுக்கு கவுரவத்தை தரக்கூடிய பிரெஸ்டீஜ் ஷீட் ஆக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி