டீசல் கார் விற்பனையை முழுமையாக நிறுத்துவதாக மாருதி சுசுகி திடீர் அறிவிப்பு.. பின்னணி இதுதான்
டெல்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியுடன், டீசல் கார்கள் விற்பனையை முழுமையாக நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
இந்தியாவின் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுசுகி. விற்பனையில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இந்த நிறுவனம்தான்.
மாருதி சுசுகி வர்த்தக மற்றும் தனிநபர் பயன்பாட்டுக்காக, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருளை கொண்டு இயங்கும் வாகனங்களை தயாரித்து வருகிறது. இதில் டீசல் கார்கள் விற்பனை 23% என்ற அளவில் உள்ளது.
சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு
கார்கள் வகைகள்
அதிக தூரம் கார்களை இயக்க வேண்டியிருப்போரும், வாடகை கார்களை இயக்குவோரும் டீசல் கார்களை வாங்குவது வழக்கம். குறைந்த அளவிலான தனி நபர் பயன்பாடு, சொந்த பயன்பாடுகளுக்காக கார் வாங்குவோர் பெட்ரோல் கார்களை வாங்குவார்கள். இந்த நிலையில்தான், 2020ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல், டீசல் கார்களை விற்பனை செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது, மாருதி சுசுகி நிறுவனம். அதன் தலைவர் ஆர்.சி.பார்கவா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
டீசல் இன்ஜின்கள்
ஸ்விப்ட், பலேனோ, எர்டிகா, டிசையர், சியாஸ், விடாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் ஆகிய கார் மாடல்களில் டீசல் இன்ஜினும் கிடைக்கிறது. பெரும்பாலான வாடகை கார் ஓட்டுநர்களும், டீசல் கார்களையே விரும்புகிறார்கள். அப்படியிருந்தும், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது மாருதி சுசுகி.
சுற்றுச்சூழல்
இதற்கு முக்கியமான காரணம், BS-VI சுற்றுச்சூழல் விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதுதான். சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை தயாரிக்க அதிக செலவு பிடிக்கும். பொதுவாக டீசல் இன்ஜின்கள் அதிக சத்தமும், அதிக புகையும் கக்க கூடியவை. இதில் BS-VI விதிமுறைகளுக்கு உட்பட்டு டீசல் இன்ஜின்களை தயாரிப்பது இன்னும் கடினமான பணி என்பதுதான் மாருதி சுசுகியின் இந்த முடிவுக்கு காரணம்.
முதலீடு தீவிரம்
ஆனால், வருங்காலத்தில், புதிய சுற்றுச்சூழல் விதிமுறைக்கு உட்பட்டு, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் திரும்ப அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அது எப்போது என்பது இப்போதைக்கு தெரியாது. இந்த பணிகளுக்காக மாருதி சுசுகி ரூ.1000 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.