மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய பாஜக எம்பி? விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு
டெல்லி: மல்யுத்த சம்மேளனத்தில் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையிலான 7 வீரர், வீராங்கனைகள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பவர் மீது பரபர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பெண் வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர்.
இது மட்டுமின்றி, லக்னோவில் அமைந்துள்ள தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பல பயிற்சியாளர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகக் கூறி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. யார் இந்த மல்யுத்த சம்மேளன தலைவர்? பாஜக எம்பியாமே.. முழுபின்னணி
போராட்டம்
இதற்காகக் கடந்த 2 நாட்களாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக், காமன்வெல்த் சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அமித் தன்கர் என்று 30க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தர் சாலையில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
விசாரணைக் குழு
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் என்பவர் மீது தான் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் உரிய விளக்கத்தைத் தரவில்லை என்றால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அவசர கூட்டத்தை நடத்தியது. அதில் ஷரன் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.
மேரி கோம் தலைமை
இந்த குழுவில் மேரி கோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஷ்வர் தத் மற்றும் சஹ்தேவ் யாதவ் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படாத நிலையில், இப்போது இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் தலைவராக மேரி கோம் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், இந்த பொய்யான புகார்களுக்காகப் பதவி விலக முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் மட்டும் வாயைத் திறந்தால் இங்கு மிகப் பெரிய சுனாமியே வரும்... யாரும் என்னைச் சிபாரிசு செய்து இந்த இடத்திற்குக் கொண்டு வரவில்லை. மக்கள் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். என்னால் பதவி விலக முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
பரபர கடிதம்
முன்னதாக இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்கள் இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பி.டி. உஷாவுக்கு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தனர். அதில், "டோக்கியோவில் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிட்டதால், வினீஷ் போகட்டை அவர் மனரீதியாகத் துன்புறுத்தினார்.. ஒரு கட்டத்தில் இதனால் வினீஷ் தற்கொலை செய்யும் அளவுக்குக் கூட சென்றார். உயிருக்கு அஞ்சும் சூழலிலேயே வாழ்ந்து வருகிறோம்" என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டனர். மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கக் குழுவிடம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வீராங்கனைகளின் அடையாளத்தை வெளிப்படுத்த வினேஷ் போகட் ஒப்புக்கொண்டுள்ளார்.
யார் இவர்
6 முறை எம்பியான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் இப்போது பாஜகவில் உள்ளார். இவர் கடந்த 1999, 2004, 2009, 2014, 2019 தேர்தல்களில் பாஜக சார்பிலும் 2009 தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பிலும் போட்டியிட்டு வென்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் வசித்து வரும் இவர், மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் இளம் வயதில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்தார் என்றும் கூறப்படுகிறது.